நடிகர் சங்க நிர்வாகிகளைத் தூண்டி விடுவது யார்?... சந்திரசேகர் கேள்வி!
சென்னை: நான் மூத்த நடிகர். 40 வருடமாக நடித்து வருகிறேன். பொது வாழ்வில் தூய்மையைக் கடைப்பிடித்து வருகிறேன். நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் நடிகர் சங்கப் பொருளாளர் பொறுப்பை ஏற்றேன். என் மீது நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் குற்றம் சுமத்தியுள்ளது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் சந்திரசேகர் கூறியுள்ளார்.
நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் கணக்கு காட்ட வேண்டும் என்று புதிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர். தற்போது போலீஸில் புகார் செய்யப் போவதாகக் கூறியுள்ளனர்.
சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுப்போம் என்று மிரட்டியுள்ளனர். இதற்கு வாகை சந்திரசேகர் தற்போது பதில் அளித்துள்ளார். அவரது விளக்கம்:
வருத்தம் அளிக்கிறது
நடிகர் சங்க கணக்குகளில் தவறுகள் நடந்து இருப்பது போல் புதிய நிர்வாகிகள் குற்றம் சாட்டுவது வருத்தம் அளிக்கிறது. நான் மூத்த நடிகர். 40 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். பொது வாழ்க்கையில் தூய்மையை கடைபிடிக்கிறேன். நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் நடிகர் சங்க பொருளாளர் பொறுப்பை ஏற்றேன். பதவியில் இருந்த காலத்தில் நேர்மையாக செயல்பட்டுள்ளேன்.
சொந்த செலவில் செயல்பட்டோம்
சங்க அலுவலகத்தில் எனது அறையில் இருந்த நாற்காலி, மேஜை, டி.வி போன்றவற்றை கூட என் வீட்டில் இருந்து தான் எடுத்து வந்து பயன்படுத்தினேன். சரத்குமாரும் அப்படித்தான் செய்தார். நடிகர் சங்க வளர்ச்சிக்காக சரத்குமார் கடுமையாக உழைத்தது எனக்கு தெரியும்.
விஜயகாந்த் விலகியபோது
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய போது, நடிகர் சங்க அறக்கட்டளையில் ரூ.1 கோடியே 10 லட்சம் இருப்பில் இருந்தது. அதன்பிறகு சரத்குமார் கலைநிகழ்ச்சி உள்பட பல்வேறு வழிகளில் அறக்கட்டளைக்கு வருவாய் ஈட்டினார். நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் இருந்து 3 தடவை தலா ரூ.25 லட்சம் வீதம் 75 லட்சம் ரூபாயை தனது சொந்த முயற்சியால் வாங்கி கொடுத்தார். நடிகர் சங்கத்தின் அருகில் இருந்த குடியிருப்பில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அதை நடிகர் சங்கத்தின் பெயரிலேயே பதிவு செய்து கொடுத்தார்.
பொய்ப் புகார்
தேர்தலுக்கு முன்பு நடிகர் சங்க இடத்தை ரூ.60 கோடிக்கு விற்று விட்டனர் என்றும், ரூ.100 கோடிக்கு விற்று விட்டனர் என்றும் பழி சுமத்தினர். அது பொய் என்பதை தேர்தல் முடிந்ததும் தாய் பத்திரம் உள்பட அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைத்து நிரூபித்தார். இதையெல்லாம் செய்த அவரை பாராட்டுவதை விட்டு பழி சுமத்துவது நியாயம் இல்லை.
கணக்கெல்லாம் சொல்லியாச்சு
நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளை கணக்கு விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அதற்கு விளக்கங்கள் கேட்டார்கள். பதில் சொல்ல அவகாசம் அளிக்காமல் அவதூறு பரப்பி உள்ளனர். மின்சாரம் உள்ளிட்ட செலவுகள், ஊழியர்கள் சம்பளம் என நடிகர் சங்கத்துக்கு மாதம் ரூ.2 லட்சம் செலவாகிறது. போராட்டங்கள், விழாக்கள் போன்றவற்றுக்கும் செலவு செய்யப்பட்டு உள்ளது. இதையெல்லாம் சிந்திக்காமல் காழ்ப்புணர்ச்சியோடு குறை சொல்கிறார்கள்.
தூண்டி விடுவது யார்
புதிதாக பொறுப்பு ஏற்றதும் ஏற்கனவே இருந்த நடிகர் சங்க ஊழியர்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்றி விட்டு புதிய ஊழியர்களை நியமித்து இருக்கிறார்கள். ரசீதுகளை எடுக்க கூட உள்ளே அனுமதிக்கவில்லை. இதற்கு பின்னால் இருப்பது யார்? எதற்காக தூண்டி விடுகிறார்கள்? என்று புரியவில்லை.
நிதானம் வேண்டும்
புதிய நிர்வாகிகள் நிதானமாக செயல்பட வேண்டும். நடிகர் சங்கத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. எனவே எங்களுக்கு பயம் இல்லை. சட்ட நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.