'சசி'க்கு சிறையில் குக்கர், வாஷிங் மெஷின், கட்டில்... விசாரணை வளையத்தில் விவேக்?
சசிகலாவிற்கு சிறையில் சலுகை அளித்தற்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த பொருட்களை வாங்கிக் கொடுத்தததாக கூறப்படும் விவேக்கிடம்
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சொகுசாக இருக்க பொருட்களை வாங்கிக் கொடுத்த விவேக்கிடம் கர்நாடகா அரசின் உயர்நிலை குழு விசாரணை நடத்தப் போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று சிறை சென்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருக்கும் காலகட்டத்தில் தனது குற்றத்திற்காக வருந்துவார் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் தான் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கர்நாடகாவில் 4 சுவருக்குள் இருந்தாலும் நிரூபித்துள்ளார் சசிகலா.
பின்னால் இருந்து இயக்குவதில் சசிகலா சிறந்த தந்திரசாலி என்பது ஜெயலலிதா உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே அனைவரும் அறிந்தது தான். இப்போது சிறையில் இருந்தாலும் பணம் கொடுத்து அனைத்தையும் தனக்கு சாதகமாக்கி சொகுசாக இருக்கிறார் சசிகலா.
சசிகலா சிறை சென்ற 2 மாதத்திலேயே தினகரனும் இரட்டை இலை லஞ்ச வழக்கில் டெல்லி திஹார் சிறை சென்று விட்டார். இந்த கேப்பில் அடுத்த அதிகார மையம் யார் என்பதில் போட்டிபோட்டவர்கள் இளவரசியின் மகன் விவேக்கும், திவாகரனின் மகன் ஜெயானந்தும் தான்.
இளவரசியின் மகன் விவேக், மற்றும் மகள் கிருஷ்ணபிரியா கட்டுப்பாட்டிலேயே போயஸ் கார்டன் உள்ளதாகத் தகவல்களும் வெளி வந்தன. இந்நிலையில் தினகரன் இல்லாத காலகட்டத்தில் விவேக் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அருகிலேயே ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்துத் தங்கி, சசிகலாவிற்கு சிறையில் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விவேக்கிடமும் கர்நாடகா அரசின் உயர்நிலை குழு விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.