அதிமுக பொதுச்செயலாளர் யார்? எடப்பாடி தெளிவுபடுத்த வேண்டுமாம்.. சொல்கிறார் தங்கதமிழ்செல்வன்
தேனி: அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் யார் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன் கூறியுள்ளார்.
டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான தங்ததமிழ்செல்வன் எம்.எல்.ஏ. இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் விசாரணையில் உள்ளது. இதில் எங்களது அணி சார்பில் பொதுச்செயலாளர் சசிகலா எனவும், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் என்றும் குறிப்பிட்டு ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம்.
இந்த பிரச்சினையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாயை திறந்து பேச வேண்டும். அவர் தனது வாயாலேயே பொதுச்செயலாளர் சசிகலா எனவும், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் என்றும் கூற வேண்டும். இனியும் பேசாமல் மவுனமாக இருக்க கூடாது. ஏனெனில் அவர் கூறினால்தான் கட்சியின் மற்ற நிர்வாகிகளின் சர்ச்சையான பேச்சுக்களை நிறுத்த முடியும். இவ்வாறு தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.