ஆர்.கே.நகர் திமுக சீட் யாருக்கு.. காமராஜர் பேத்திக்கா இல்லை சிம்லா முத்துச்சோழனுக்கா?
சென்னை: திமுக சார்பில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்பது இன்று தெரிய வரும். திமுக தனது வேட்பாளர் பெயரை இன்று அறிவிக்கவுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இதுவரை முக்கியக் கட்சிகள் எதுவும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை. தேமுதிக, தீபா பேரவை ஆகியவை மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்ய நேற்று நேர்காணல் நடந்தது. அதில் 17 பேர் கலந்து கொண்டனர்.
காமராஜர் பேத்தி
கடந்த பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி மயூரி உள்பட 17 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.
ஸ்டாலின் நேர்காணல்
இந்த 17 பேரிடமும் நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. அதில் கலந்து கொண்ட 17 பேரும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
சிம்லாவுக்கா, காமராஜர் பேத்திக்கா
இதில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்லாவுக்கே வாய்ப்பளிக்கப்படுமா அல்லது பெருந்தலைவர் காமராஜரின் பேத்திக்கு வாய்ப்பு தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று அறிவிப்பு
நேர்காணல் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், இன்று வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். வலுவான வேட்பாளரை நிறுத்தவே திமுக முயலும் என்பது மட்டும் உறுதி.
கவண் தேவை
அதிமுக தற்போது பிளவடைந்த நிலையில் இருந்தாலும் கூட வாக்குகளில் பெரும்பாலானவை ஓ.பி.எஸ் அணிக்கும், தீபாவுக்குமே போகும் என்பதால் அதை பிரித்தால் மட்டுமே திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாகும் என்பதால் திமுக கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.