அன்புமணிக்கு எதிராக கே.பி.முனுசாமி மூலம் "செக்" வைத்த ஜெ....!
தருமபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து ஒருவழியாக களத்தில் குதித்து விட்டார். அவரை தோற்கடிக்க வேண்டும் என்றும் டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது என்றும் தருமபுரி மாவட்ட அதிமுகவினருக்கு தனி அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
அன்புமணிக்கு எதிராக அதிமுகவில் களமிறங்க இருக்கிறார் கே.பி.முனுசாமி. இவர் அன்புமணியின் அனுதாபி என்று கூறப்படுபவர். இந்த தேர்தலில் முனுசாமி ஜெயித்தால் மட்டுமே அவரது அரசியல் வாழ்வு நீடிக்கும் இல்லையெனில் அஸ்தமனம்தான்.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலாளராகவும், அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராகவும் கே.பி.முனுசாமி செயல்பட்டு வந்தார். அதில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து வந்தார்.
ஐவர் அணியில் இருந்த கே.பி.முனுசாமி, 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்குக்குப் பின்னர் கட்டம் கட்டப்பட்டார். காரணம் தருமபுரி தொகுதியில் அன்புமணி ஜெயிப்பதற்கு கே.பி.முனுசாமிதான் காரணம் என்று கூறப்பட்டது.
பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணிக்கு எதிராக பென்னாகரம் தொகுதியில் களமிறங்குகிறார் கே.பி.முனுசாமி.
அன்புமணிக்கு எதிராக வியூகம்
தருமபுரி மாவட்டத்தில் எந்த தொகுதியில் அன்புமணி போட்டியிட்டாலும் அவரை மிக மோசமாகத் தோற்கடிக்க வேண்டும் என ஸ்பெஷல் அசைன்மெண்ட்டே அம்மாவட்ட அதிமுகவினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
பென்னாகரத்திற்கு மாறிய முனுசாமி
பென்னாகரம் தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேலுமணியை மாற்றிவிட்டு கடந்த வாரம் கே.பி முனுசாமியை அறிவித்தார் ஜெயலலிதா. இவர் ஏற்கனவே வேப்பனஹள்ளியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுருந்தார். அன்புமணிக்கு எதிராக முனுசாமியை மோதவிடவேண்டும் என்பதற்காகவே பென்னாகரத்திற்கு மாற்றப்பட்டாராம் கே.பி.முனுசாமி.
கே.பி.முனுசாமி
அதிமுக தொடங்கிய காலம் தொட்டு அந்தக் கட்சியின் உறுப்பினராக கே.பி.முனுசாமி இருந்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணி பொறுப்பு உள்பட பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
அதிமுகவில் பதவிகள்
கடந்த 1991 ஆம் ஆண்டில் காவேரிப்பட்டினம் தொகுதியில் இருந்தும், அதன்பின் கிருஷ்ணகிரி தொகுதியில் இருந்து லோக்சபாவிற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காவேரிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை.
அமைச்சரான முனுசாமி
இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டப் சபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவருக்கு மிக முக்கிய துறையான நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டு மே மாதம் வரை அவர் அந்தத் துறையின் பொறுப்புகளை கவனித்து வந்தார். ஐவரணியிலும் இடம்பெற்றிருந்தார்.
அன்புமணிக்கு ஆதரவா?
லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து கட்சிப்பதவி, அமைச்சர் பதவியைப் பறித்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். இந்த நிலையில் இந்த நிலையில் தான் கே.பி முனுசாமியை வேப்பனஹள்ளியில் வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா, பின்னர் அன்புமணிக்கு எதிராக பென்னாகரத்தில் முனுசாமியை மோதவிட்டுள்ளார் ஜெயலலிதா.
ஜாதி வாக்குகள்
வன்னியர் சமூகத்து மக்களிடம் அதிக செல்வாக்குள்ளவர் முனுசாமி. எனவே பென்னாகரத்தில் அன்புமணிக்கு மிகுந்த தலைவலியாக கே.பி.முனுசாமி இருப்பார். அடுத்தபடியாக, பாலக்கோட்டில் மா.செ அன்பழகன் நிற்கிறார்.
6ல் நான்கு வேட்பாளர்கள்
தருமபுரியில் வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக குண்டர் சட்டத்தில் சிறை சென்ற பு.தா.இளங்கோவன் நிற்கிறார். அதாவது, தருமபுரி எம்.பி தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளில் நான்கில் பிரபலமான வன்னியரை நிறுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.
நண்பர்களை மோதவிடும் ஜெ.,
ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமிக்கு எதிராக நத்தம் விசுவநாதன், அரவக்குறுச்சியில் கே.சி பழனிசாமிக்கு எதிராக செந்தில் பாலாஜி போல அன்புமணிக்கு எதிராக கே.பி முனுசாமியை மோதவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் எதிர்தரப்பிடம் வெளியே தெரியாத நண்பர்களாக இருப்பவர்கள். இதை அறிந்துதான் இப்படி எதிரெதிராக மோதவிட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.
அன்புமணி வெல்வாரா?
அன்புமணிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் முனுசாமி மட்டுமல்ல திமுக வேட்பாளர் இன்பசேகரனும் களத்தில் இருக்கிறார். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பென்னாகரம் தொகுதியில் போட்டியில் போட்டியிடுகிறது. வலுவான வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களமிறக்கும் என்று கூறப்படுகிறது. பலமுனை போட்டியில் அன்புமணி கரையேறுவாரா? காணாமல் போவாரா?.