கூவத்தூரில் குறட்டை.. குஜராத் எம்எல்ஏக்களிடம் கெடுபிடி.. ஐடியின் இரட்டை வேடம் கலைந்தது
பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியில் ரெய்டு நடத்தும் வருமான வரித் துறை கூவத்தூரை மட்டும் மறந்தது ஏனோ?
சென்னை: குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஈகிள்டன்னில் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகள், கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டபோது சோதனை மேற்கொள்ளாதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவர்கள் பாஜகவிற்கு தாவிவிட கூடுவர் என்பதால் 44 எம்எல்ஏ-க்கள் பெங்களூரில் உள்ள ஈகிள்டன் ரிசார்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஐடி ரெய்டு
பெங்களூர் விடுதியில் பணபரிமாற்றம் நடைபெறக் கூடும் என்பதால் வருமான வரித் துறையினர் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும் கர்நாடக அமைச்சர் சிவக்குமார், எம்பி சுரேஷ் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நிகழ்த்தப்பட்டது.
கூவத்தூரில் கடமை தவறியது ஏன்
இதேபோல் ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக 2ஆக பிளவுபட்டது. இதனால் எம்எல்ஏ-க்கள் வேறு அணிக்கோ, வேறு கட்சிக்கோ தாவிடுவர் என்ற அச்சத்தின் காரணமாக 122 எம்எல்ஏ-க்களை சசிகலா கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்டில் தங்க வைத்திருந்தார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த எம்எல்ஏ-க்களுக்கு தங்கம், பணம், பதவி ஆகியவை வழங்குவதாக வாக்குறுதியும் அளிக்கப்பட்டன. பெங்களூரில் தங்கள் கடமையை சரியாக செய்யும் வருமான வரித் துறையினர் கூவத்தூரில் ரெய்டு நடத்தாதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குஜராத்தில் பாஜக ஆட்சி
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் குஜராத்திலோ பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித் துறையினர் பாஜகவுக்கு தங்கள் விசுவாசத்தை காட்டுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பண பேரத்தில் ஈடுபட்டது என்று தனியார் ஆங்கில தொலைகாட்சி நிறுவனம் ஒன்று ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியும் இதுவரை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மீது எந்த நடவடிக்கை இல்லை.
ஏன் இந்த பாரபட்சம்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருக்கும்வரைதான் நாம் விரும்பும் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதால் பாஜகவும் கூவத்தூரில் ரெய்டு நடத்த உத்தரவிடவில்லையா.ஈகிள்டன்னில் பணப்புழக்கம் இருக்கிறது என்றால், கூவத்தூரில் அது இருந்திருக்குமே. எதற்காக பாஜக இரட்டை நிலைப்பாடு காட்டுகிறது.
கடமை மறந்தது ஏன்
ஈகிள்டன் ரிசார்டில் பணப்பட்டுவாடா நடப்பதாக எந்த வித புகாரும் வராமலேயே கடமை உணர்ச்சியோடு செயல்படும் வருமான வரித்துறையினர் கூவத்தூரில் மட்டும் தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக ஆற்றுவது ஏன் என்று தாங்கள் சார்ந்த அரசால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவோம் என்ற அச்சம்தான் காரணமா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.