கேஸை முடித்து வையுங்க...இல்லை ஜெயிலுக்கு அனுப்புங்க... கோர்ட்டில் கொந்தளித்த வைகோ!
தம் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும்; இல்லையெனில் சிறைக்கு அனுப்புங்கள் என எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ கொந்தளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
சென்னை: தம் மீதான தேசதுரோக வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்; இல்லையெனில் தம்மை சிறையிலடைக்க வேண்டும் என கொந்தளித்ததால் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வைகோவை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோவின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
திடீர் மனு
இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று திடீரென ஆஜரான வைகோ ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஜெயில்ல போடுங்க
அந்த மனுவில், தம் மீது நிலுவையில் உள்ள தேச துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன் வழக்கை விரைந்து முடிக்காவிட்டால் தம்மை சிறைக்கே அனுப்பிவிடுமாறும் வைகோ கேட்டுக் கொண்டார்.
நீதிமன்ற காவல்
எழும்பூர் நீதிமன்றத்தை வைகோவின் இந்த கோரிக்கை அதிர வைத்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத், வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
ஜாமீன் வேண்டாம்....
மேலும் வைகோ தமது சொந்த ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். ஆனால் வைகோ ஜாமீனில் செல்ல மறுத்தவிட்டார்.
புழல் சிறையில்...
இதையடுத்து வைகோவை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையிலடைத்துள்ளனர். தமிழகமே ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலை பெரும் எதிபார்ப்புடன் பார்த்து கொண்டிருக்க வைகோவின் இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.