மழைன்னாலே மெர்சலாகும் சென்னை மக்கள்... செய்யத் தவறியது என்ன?
2 நாள் மழை என்றாலே சென்னை மக்கள் பீதியாகும் நிலைக்கு யார் காரணம், அரசும் மக்களும் செய்யத் தவறியது என்ன இங்கே பார்க்கலாம்.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 2 நாள் மழைக்கே மக்கள் பீதியாகின்றனர். மக்களின் இந்த அச்சத்திற்கு யார் காரணம். அரசும், மக்களும் செய்யத் தவறியது என்ன?
வடகிழக்குப் பருவமழை பெய்தாலும் கஷ்டம், பொய்த்தாலும் கஷ்டம் என்ற நிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் இந்த ஆண்டில் கடுமையான தண்ணீர் வறட்சியை மாநிலம் சந்தித்தது. செய்வதறியாது கைபிசைந்து நின்ற அரசு சென்னை மக்களுக்கு கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து மக்களுக்கு விநியோகித்தது. தமிழகத்தின் பிற பகுதி மக்களுக்கும் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடும் வறட்சி நீடிப்பதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர்கள் மக்களை கேட்டுக் கொண்டனர். மற்றொரு புறம் தண்ணீர் இல்லாமல் கருகிய விவசாயப் பயிர்களையும், வறண்டு கிடக்கும் விளை நிலங்களையும் பார்த்து மனம் நொந்து பல விவசாயிகள் விளைநிலத்திலேயே மாண்டு போயினர். இந்த ஆண்டு பருவமழை நிச்சயம் அதிக அளவில் இருக்கும் என்பதற்கு சமிக்ஞை காட்டுவது போல பெங்களூரு, ஐதராபாத், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை பின்னிப் பெடலெடுத்தது.

தத்தளிக்கும் சென்னை
அப்போது முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவே தற்போது 2 நாள் மழைக்கே சென்னையின் தாழ்வான பகுதிகள் தத்தளிக்கின்றன. இதே போன்று சாலைகளிலும் அதிக அளவு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இத்தனைக்கும் பருவமழை இன்னும் சராசரி அளவை எட்டவில்லை. சென்னையில் 10 சென்டிமீட்டர் என்ற அளவில் தான் மழை பெய்துள்ளது.

நீர் வழி ஆக்கிரமிப்புகளால் பீதி
சிறுமழை என்றாலே சென்னை மக்கள் பீதியாவதற்கு நீர் வழித் தடங்களின் ஆக்கிரமிப்புகளே முக்கியக் காரணம். வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்று பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளன. 375 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உருவாகிய போதும், இன்று மாடமாளிகைகள் கூட கோபுரங்கள், ஹைஃபை கட்டிடங்களாக காட்சியளிக்கும் சென்னையும் ஒரு கிராமம் தான்.

திட்டமிட்டே செய்யப்பட்ட நீர் வழி போக்குவரத்து
நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மாட்டு வண்டியில் தான் பயணமே நடந்தது. பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்டாலும் அவர்கள் செய்த நல்ல காரியங்கள் பல. கோடை காலம் வந்தால் குதூகலமாக சென்று வர ஊட்டி, தமிழகம் அண்டை மாநில நீர் நிலைகளை நம்பித் தான் உள்ளது என்பதால் ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்டவற்றை கட்டி வைத்தனர். இதே போன்று நம் முன்னோர்களும் மக்களின் தேவைகளுக்காக ஆங்காங்கே நீர் வழிப் போக்குவரத்தை ஏற்படுத்தினர்.

வளங்களை சுரண்டினோம்
ஆனால் அவற்றை முறையாக நாம் பராமரித்தோமா என்றால் அது தான் இல்லை. வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை அழித்தோம், நீர் நிலைகளில் இருந்து மணல் வளத்தை கொள்ளையடித்தோம், கொஞ்சம் கொஞ்சமாக நிலப்பரப்பை அதிகரிப்பதாகச் சொல்லி நீர் பரப்புகளை சுருங்கச் செய்தோம். இதன் விளைவு தான் இன்று சிறு மழை என்றாலே தண்ணீர் ஓட வழியின்றி வீடுகளைச் சூழ்ந்து நிற்கிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை
பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காட்டில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பின் விளைவையே வேளச்சேரி, மடிப்பாக்கம் மக்கள் ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும் அனுபவித்து வருகின்றனர். இதே போன்று சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டே வந்தாலும் அவற்றிக்கு ஏற்ப கழிவுநீர் வடிகால்வாய்கள் ஏற்படுத்தாதது, மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் ஏற்படுத்தாதது உள்ளிட்டவையும் காரணங்களாக உள்ளன.

சென்னையின் சாபக்கேடு
மழை என்றாலே துள்ளித் திரிந்த காலம், மனதை ரம்மியமாக்கும் சூழல் இவற்றில் இருந்து மாறி பீதியாகும் நிலைக்கு தள்ளியது யாருடைய குற்றம். அரசும், மக்களும் நீர் மேலாண்மையை புரிந்து சரியான திட்டமிடல் செய்யாத வரை சென்னைக்கான இந்த சாபக்கேடு எப்போதும் நீங்காது. பிரச்னை வரும்போது மட்டும் போர்க்கால நடவடிக்கை எடுக்காமல் முன்கூட்டியே திட்டமிடல் செய்திருந்தால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் பல தலைமுறைகளுக்கு எஞ்சி நிற்கும் என்பதை புரிந்த நிர்வாகம் செய்தால் எதிர்காலத்தில் தப்பும் சென்னை.












Click it and Unblock the Notifications