பழம் நழுவி பாலில் விழும் என்று கடைசிவரை கருணாநிதி கூறியது ஏன்? பகிரங்கப்படுத்திய சந்திரகுமார்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக பிரமுகரை நேரில் சந்தித்தது என்? அவர்களின் கூட்டணி வருவதாக வாக்குறுதி அளித்தது ஏன்? என தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்துள்ளது அக்கட்சியினர் பலருக்கு பிடிக்கவில்லை என்று கூறி தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த சந்திரகுமார் தலைமையில், கட்சி நிர்வாகிகள் சிலர், திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தாக வேண்டும் என்று விஜயகாந்துக்கு நேற்று கெடு விதித்தனர்.
ஆனால், விஜயகாந்துக்கு கெடு விதித்த அனைவரும் கட்சியில் இருந்து நேற்றே, கூண்டோடு நீக்கப்பட்டனர். இந்நிலையில் சந்திரகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் விஜயகாந்த் எதற்காக திமுக முக்கிய பிரமுகர் ஒருவரை நேரில் சந்தித்து பேசினார். அந்த பிரமுகரிடம் எதற்காக திமுக கூட்டணிக்கு வருவதாக வாக்குறுதி அளித்தார்?
இரண்டொரு நாளில் திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என்று விஜயகாந்த், அந்த திமுக நபரிடம் கூறியதை வைத்துதான், பழம் கனிந்துவிட்டது, சீக்கிரம் பாலில் விழும் என்று கருணாநிதி பேட்டியளித்தார்.
சட்டசபை தேர்தலில் 117 தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தலில் 25% இடம் தர வேண்டும் என்று திமுகவிடம் கேட்டதாக விஜயகாந்த் எங்களிடம் சொன்னார். அப்படியிருக்கும்போது திடீரென மக்கள் நல கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி வைத்துக்கொண்டது.
திமுக ஊழல் கட்சி என்று விஜயகாந்த் கூறிவந்தது உண்மைதான். ஆனால், வேட்பாளர் நேர்காணலின்போது, திமுகவோடு கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்று விஜயகாந்த் ஏன் கேட்டார்?
தெரிந்தோ தெரியாமலோ திமுக ஆட்சியில் தவறுகள் நடந்து இருந்தால், தவறுகளை திருத்திக்கொள்கிறோம் என்று ஸ்டாலின், தனது 'நமக்கு நாமே' பயணத்தின்போது தெரிவித்துள்ளார். எனவே திமுகவோடு கூட்டணி சேருவதில் தப்பில்லை.
ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்தபோது தேமுதிக அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தது. அதேபோல (2ஜி வழக்கு இருந்தாலும்கூட) திமுகவோடு, தேமுதிக கூட்டணி சேரலாம். ஒருவேளை, திமுக ஆட்சியில் தவறு நடந்தாலும் அதை கூட்டணியில் இருந்தபடியே தட்டிக்கேட்கலாமே. இதில் என்ன தவறு இருக்கிறது. இவ்வாறு சந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.