உரிமை இருக்கிறதே.. ஜெ. மருத்துவ சிகிச்சை விவரம் கேட்டு தீபா வழக்கு தொடராதது ஏன்?
ஜெயலலிதாவின் ரத்த சம்மந்தப்பட்ட உறவுகள் யாருமே அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவமனையிலிருந்து கேட்டு பெறவில்லை. எனவே தீபா அதை செய்ய முடியும்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் ரத்த உறவான அவரின் அண்ணன் மகள் தீபா நினைத்தால் பெற முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு கடந்த டிசம்பரில் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்,பார்த்திபன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தனக்கும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் இருப்பதாக கூறி மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு தலைமை நீதிபதி அமர்விற்கு ஒத்திவைத்திருந்தார்.
பிப்ரவரிக்கு வழக்கு
இதையடுத்து இந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய,மாநில அரசுகள் காலஅவகாசம் கோரியது. இதையடுத்து 4 வார காலம் அவகாசம் வழங்கி வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
அப்பல்லோ மறுப்பு
வழக்கு விசாரணை மீண்டும் வரும்போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையும், மருத்துவ சிகிச்சை குறித்த தகவலை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிகிச்சைகள் குறித்த தகவல்களை ஜெயலலிதாவின் ரத்த சம்மந்தப்பட்ட உறவினர்களுக்கு மட்டுமே அளிக்க முடியும் என முதலில் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
அப்பல்லோ தயார்
ஆனால் ஜோசப்பிடம் தரப்போ, தான் ரத்தம் சம்மந்தம் கிடையாது என்றும், அதேநேரம், தமிழகத்தின் குடிமகன் என்றும், அதிமுக கட்சியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். எனவே கோர்ட் உத்தரவின்பேரில் சீலிடப்பட்ட உரையில் விவரத்தை தாக்கல் செய்ய அப்பல்லோ முன்வந்துள்ளது.
ரத்த உறவு
இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் கூறியது: அப்பல்லோவே ஒப்புக்கொண்டபடி ரத்த சம்மந்த உறவுகளுக்கு ஜெயலலிதா சிகிச்சை பற்றிய விவரங்களை கேட்டறிய உரிமையுள்ளது. இதுவரை ஜெயலலிதாவின் ரத்த சம்மந்தப்பட்ட உறவுகள் யாருமே அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவமனையிலிருந்து கேட்டு பெறவில்லை. எனவே தீபா அதை செய்ய முடியும். இதற்கு சட்டத்தில் இடமுள்ளது என்று தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையளிக்க மறுத்தால் நீதிமன்றம் செல்ல முடியும். அப்போது ரத்த உறவு என்பதால் கோர்ட் உத்தரவு தீபாவுக்கு ஆதரவாகவே இருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.
தீபா கோரிக்கை
இரு தினங்கள் முன்பு செய்தியாளர்களுக்கு தீபா பேட்டியளித்தபோது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கருதுகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு உரியவர்கள் பதில் தர வேண்டும் என தீபா பதிலளித்தார். அவர் சசிகலாவை மனதில் வைத்து அதை கூறியிருக்கலாம். ஆனால் தீபாவுக்கே அந்த வாய்ப்பு இருந்தும் அதை ஏன் அவர் இதுவரை செய்ய தவறிவருகிறார் என்பது பெரும் கேள்விக்குறி.
தயக்கம் ஏன்?
ஆளும் கட்சியின் முக்கிய நபர்கள் மீது தீபாவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதா? அதனால்தான் அவர் ஜெயலலிதா சிகிச்சை குறித்த விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் தனக்கு யார் மீதும் பயம் இல்லை என்று தீபா கூறியுள்ள நிலையிலும், ஏன் இந்த தகவலை வெளிக்கொண்டுவர தீபா முயலவில்லை? அரசியலுக்கு வரப்போகிறேன் என கூறிவரும் தீபா, இந்த ஒரு சிறு விஷயத்தை கூட செய்வதற்கு தயக்கம் காட்டுவது ஏன்? ஜெயலலிதா சிகிச்சை குறித்த விவரம் ஒருவேளை அவரது அரசியல் எதிர்காலத்திற்கே பெரும் உந்து சக்தியாகவும் அமையலாம் என்ற யூகம் தீபாவுக்கு ஏன் வரவில்லை? இதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள். பல கோடி தமிழக மக்களின் விருப்பத்திற்கிணங்க ஜெயலலிதா சிகிச்சை குறித்த விவரங்களை தீபா வெளிக்கொண்டுவருவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.