உக்கிர போராட்டம்.. உளவுத்துறை எச்சரித்த பிறகும் தமிழகத்திற்கு வம்படியாக வந்த மோடி! பின்னணி என்ன?
Recommended Video
சென்னை: கருப்பு கொடி போராட்டம் தீவிரமாக இருந்த நிலையிலும், பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 12ம் தேதி மகாபலிபுரம் அருகேயுள்ள திருவிடைந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அப்போது பெரும் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
கருப்பு கொடி காண்பிப்போம் என திமுக அறிவித்து அதை செயல்படுத்தியது. பிற கட்சிகள், அமைப்புகளும் அதை செய்தன. ஆனால், பிரதமர் மோடி இந்த எதிர்ப்பு அவ்வளவு வீரியமாக இருக்கும் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை.
ஏர்போர்ட்டிலேயே ஆரம்பம்
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதுமே ஏர்போர்ட்டை முற்றுகையிட்டு பல அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனால் மோடி முகத்தில் அப்போதே இறுக்கம் தொற்றிக்கொண்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் என்னதான் மகிழ்ச்சியோடு, பச்சை சால்வை போட்டு வரவேற்றிருந்தாலும் கூட மோடியை அவை சமாதானப்படுத்தவில்லை.
உளவுத்துறை எச்சரிக்கை
ஆனால், தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் நடைபெறும் என்று, ஏற்கனவே மத்திய உளவுத்துறை பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை கொடுத்ததோடு, மோடி தமிழகம் செல்லும் பயணத்திட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என பரிந்துரைத்தது. டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும், மோடியை சந்தித்து நிலவரங்களை எடுத்து கூறினார்.
ராஜ்நாத்சிங் அதிருப்தி
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடமும் ஆளுநர் தமிழக நிலைமையை எடுத்து கூறியுள்ளார். போராட்டங்களை ஒடுக்க தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் அப்போது ராஜ்நாத்சிங்கிடம் கூறியதாக தெரிகிறது. முன்னெச்சரிக்கையாக கூட போராட்ட குழு தலைவர்களை கைது செய்யவில்லையா என கேட்டு ராஜ்நாத்சிங் அதிருப்தி வெளிப்படுத்தினாராம். இதன்பிறகு, பாரத் பந்த் நடைபெறுவதால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று ராஜ்நாத்சிங் அலுவலகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்தது.
பங்கேற்பதில் உறுதி
கருப்பு கொடி போராட்டங்களால் ஏப்ரல் 11ம் தேதியே கண்காட்சியை துவக்கிவிட கூறியுள்ளார் மோடி. கருப்பு கொடி காண்பித்தால் துவக்க விழா நிகழ்ச்சிகள் செய்திகளில் இடம் பிடிக்காமல், கொடி காட்டியதே இடம் பிடிக்கும் என்பதே, மோடி ஒருநாள் தாமதமாக 12ம் தேதி வர காரணமாம். அதுவும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியதால்தான் மோடி வருகை தந்துள்ளார். டெல்லி, கோவாவுக்கு பிறகு முதல் முறையாக தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட கண்காட்சி நடைபெற வைத்ததில் நிர்மலா சீதாராமனுக்குதான் பங்கு அதிகம். எனவே, சர்வதேச நாடுகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சிக்கு மோடி வந்தே தீர வேண்டும் என நிர்மலா சீதாராமன் தரப்பு வற்புறுத்தியதால்தான் மோடி வந்துள்ளார். ஆனால் இந்த போராட்டங்களால் அவர் மிகுந்த அப்செட்டாக உள்ளார் என்கிறது டெல்லி வட்டாரம்.