மருத்துவ கல்லூரி சீட்டு விற்பனை மோசடி- எஸ்ஆர்எம் கல்விக்குழும நிறுவனர் பச்சமுத்து விரைவில் கைது?
சென்னை: மருத்துவக்கல்லூரி சீட்டுகளை விற்ற வழக்கில் எஸ்.ஆர்.எம் கல்விக்குழும நிறுவனர் பச்சமுத்துவிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதே நேரத்தில் பச்சமுத்துவை கைது செய்ய எந்த ஒரு தயக்கமும் இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இதனால் பச்சமுத்து விரைவில் கைது செய்யப்படக் கூடும் என தெரிகிறது.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்களிடம் பல கோடி வசூலித்த மதன் கடந்த மே மாதம் 29-ம் தேதி மாயமானார். இதனிடையே மாணவர்களிடம் பணம் பெற்றது குறித்து கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டார். அக்கடிதத்தில் மாணவர்களின் பணத்தை எஸ்.ஆர்.எம். கல்லூரி நிர்வாகிகளிடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மதன் மாயமானதல் மாணவர்கள் பச்சமுத்து வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பாதிக்கப்பட்ட 109 மாணவர்களும் பணத்தை மீட்டுத்தரக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும், 109 பேரில் 14 பேர் பணத்தை மீட்க உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சேர மதனிடம் பணம் கொடுத்த மாணவர்கள் தொடுத்த வழக்கு மற்றும் மதனின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பணம் வாங்கிக் கொண்டு கொடுக்கப்பட்ட ரசீதில் உள்ள கையெழுத்தை ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை? வழக்கை முறையாக விசாரிக்காதது காவல்துறைக்கு அவமானமாக இல்லையா? என்று சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கை முறையாக விசாரிக்காத காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முறையாக விசாரிக்காவிட்டால், வேறு அமைப்புக்கு வழக்கை மாற்ற நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதன் பின்னர் நீதிபதிகளின் கேள்விகளுக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம் பதில் அளித்தார். இதில் இரண்டு வாரங்களில் வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்து விடுவோம் என்றும், தேவைப்பட்டால் பச்சமுத்துவை கைது செய்ய தயக்கம் ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, மதனை வரும் 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த பணம் யாரிடம் உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கால அவகாசம் வழங்கினர்.