கூட்டணிக்கு அழைக்கும் கமல்.. ரஜினி மௌனம் ஏன்?
கூட்டணிக்கு அழைக்கும் அளவுக்கு நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டார். ஆனால் ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அறிய அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
சென்னை: மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரவும் தயார், ரஜினியை கூட்டணி சேர்க்கவும் தயார் என்று விழா ஒன்றில் நடிகர் கமல் பேசிய நிலையில் தனது தலைவர் ரஜினிகாந்த் இன்னும் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்திய ஹாட் டாப்பிக் என்று பார்த்தால் அதிமுக களேபரங்களையும் தாண்டி ரஜினி, கமல் அரசியல் பிரவேசம்தான் முன்னணி வகித்து வருகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக நேரடியாக அறிவிக்கவில்லை என்றாலும் அவரது அரசியல் ஆசையை அவரது நண்பர் ராம் பகதூர் மூலமும், தமிழருவி மணியன் மூலமும் தெரிவித்துவிட்டார்.
இதனால் மனம் குளிர்ந்த ரஜினி ரசிகர்கள் 'தலைவர்' எப்போது கட்சியை தொடங்குவார், நாம் எப்போது 'தலைவரின்' கொள்கைகளை பிரசாரம் செய்வது என்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசனையில் உள்ளனர்.
கமலின் டுவிட்டர் அரசியல்
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் பேசுவதால்தான் வயதுக்கு வராத அரசியல்வாதி என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தார். ஏற்கெனவே தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு போச்சு என்று ரஜினியின் கருத்தால் லேசாக பொங்கி எழுந்த அதிமுக அமைச்சர்கள் கமலின் தொடர் அரசியல் விமர்சனங்களுக்கு கடல் அலை போல் கொந்தளித்து விட்டனர்.
அரசியலுக்கு வரட்டும்
இந்நிலையில் அவர் அரசியலுக்கு வந்தால்தான் அது எத்தகைய முள்படுக்கை என்பது தெரியும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கமல் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் தனிக் கட்சி தொடங்கும் முடிவில் உள்ளதாக தனியார் வெப்சைட் ஒன்றுக்கு கமல் பேட்டியளித்திருந்தார்.
Recommended Video
ரஜினிக்கு அழைப்பு
சென்னையில் தமிழ் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், மக்கள் விரும்பினால் தான் அரசியலுக்கு வர தயார். ரஜினி ஆசைப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு பின்னர், எனது அணியில் இணைத்துக்கொள்ள தயார் என்றும் அவர் பேசியிருந்தார்.
ரஜினி ரசிகர்கள் கவலை
அரசியல் குறித்து முதலில் பேசியது ரஜினிகாந்த்தான். ஆனால் அதன் பின்னர் பேசிய கமலோ இன்று ரஜினியையே கூட்டணிக்கு அழைக்கும் லெவலுக்கு சென்றுவிட்டனர். ஆனால் இதுவரை ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று ஆதங்கத்தில் உள்ளனர்.
கட்சி, கொடி தயார் பணிகள்
அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்சி, கொடி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் உலா வருகின்றன. கடந்த முறை நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தின்போது ரஜினியின் அரசியல் பேச்சால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் மீண்டும் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் தலைவர் ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
ரஜினியின் நிலைப்பாடு என்ன?
ரஜினியை பொருத்தவரை அவர் கமலின் அழைப்பை ஏற்று அவருடன் செல்வாரா அல்லது "என் வழி தனி வழி" என்று தனி கட்சியை தொடங்குவாரா என்பதை அவராகவே விளக்கினால் மட்டுமே ரஜினி காந்தின் மௌனத்தின் பின்னணி தெரிய வரும். இந்த மௌனத்தின் பின்புலத்தில் ஏதேனும் பெரிய திட்டங்களுடன் ரஜினி இருக்கிறாரா என்பது குறித்து அடிக்கடி அவர் கூறுவதுபடி, ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். எப்போது ஆண்டவன் சொல்வது அதை இந்த அருணாச்சலம் செய்வது என்ற எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் வழிமீது விழி வைத்து காத்திருக்கின்றனர். கமலின் கருத்துக்காவது ரஜினி பதில் சொல்வாரா என்பது அவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.