சிதறு தேங்காய் போல் உடைக்காமல் இன்னும் சஸ்பென்ஸ் ஏன் தலைவா?.. ஒரு ரசிகையின் ஆதங்கம்!
கட்சி தொடங்குவது என்று முடிவாகிவிட்ட பிறகு அதை கூற இன்னும் 6 நாட்கள் சஸ்பென்ஸ் எதற்கு என்று ஒரு ரசிகை கேட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: அரசியல் கட்சி தொடங்குவது குறித்து சிதறு தேங்காய் போல் உடைக்காமல் இன்னும் 6 நாட்கள் சஸ்பென்ஸ் வைப்பது ஏன் என்று ஒரு ரஜினி ரசிகை கேட்டுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்த ரஜினி, கடந்த மே மாதம் திடீரென ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய கருத்துகள் அவரது அரசியல் பிரவேசம் உறுதி என்பதை ஊர்ஜிதப்படுத்தின.
அதன் பின்னர் 6 மாத காலம் அமைதியாக ரஜினி இருந்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் மாட்டார் என்று ஒரு தரப்பும், இது படங்களை பிரமோட் செய்வதற்காக அவர் அடிக்கும் வழக்கமான ஸ்டென்ட் என்று இன்னொரு குரூப்பும் கிளப்பின.
மிகவும் எதிர்பார்ப்பு
இன்று ரஜினிகாந்த் 2-ஆவது முறையாக ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ டிசம்பர் 31-ஆம் தேதி தனது நிலைப்பாட்டை சொல்வதாக கூறியுள்ளார். இத்தனை ஆண்டு காலத்துக்கு பிறகு, இன்னும் 6 நாட்கள் சஸ்பென்ஸ் ஏன் என்பதுதான் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து ஒரு ரசிகையின் ஆதங்கம் இதோ...!
போர் வரும் வரை எல்லாம்...
கட்சி, சின்னம்,கொடி என அனைத்தும் ரெடியாகிவிட்டதாக பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. அப்படி இருக்கும் போது சிதறு தேங்காய் போல் பட்டென்று சொல்லிவிடாமல், இன்னும் போர் வரவில்லை என்றால் எப்படி. கட்சி ஆரம்பிக்கவே தேர்தல் வந்தால்தான் ஆச்சு என்றால் எப்படி தலைவா. ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்று நீங்கள்தானே போன சந்திப்பில் கூறினீர்கள். போர் வர இன்னும் மூன்று ஆண்டுகளாகும். அதன் பிறகு, உங்களுக்கு ஓடியாடி எப்படி உழைக்க முடியும். 20 ஆண்டுகளாக தவம் கிடக்கும் அவர்கள் நீங்கள் சொன்னவுடன் உங்கள் ஸ்பீடுக்கு வேலை பார்ப்பார்கள் அதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் சஸ்பென்ஸை உடைக்காமல் இருந்தால் எப்படி.
சரியான தருணம்
தற்போது தமிழகத்தில் சிறந்த தலைமைக்கு பொறுத்தமானவர் யாரும் இல்லை. தான் நடிக்கும் படங்கள் பிளாப் ஆகி தயாரிப்பாளருக்கு இழப்பீடு வரக் கூடாது என்று அடுத்த படத்தில் அவருக்கு இலவசமாக நடித்துக் கொடுக்கும் உங்களை போன்று ஒருவர் அரசியலுக்கு தேவை. இதுதான் சரியான தருணம். இந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கையில் எடுங்கள்
மக்கள் பிரச்சினைகளை கையில் எடுங்கள். அப்போதுதான் மக்கள் உங்கள் பக்கம் இருப்பர். மக்கள் மனதை கவர வேண்டும் என்று பேசினீர்களே அதுஇதுதான் தலைவா. அரசியலுக்கு வர சரியான வியூகம் வகுத்து சரியான நேரத்தில் இறங்கினால் தமிழகத்தின் முதல்வர் ரஜினிதான் என்பதில் சந்தேகம் இல்லை.
தெளிவு, துணிவு, தைரியம் இவை மூன்றையும் வைத்துக் கொண்டு இறங்கி அடிங்க...தமிழகமே உங்கள் பின்னால் நிற்கும்.
இனியும் தாங்காது
டிசம்பர் 31-ஆம் நாளை எதிர்பார்த்து ரசிகர்களுடன் சேர்ந்து தமிழக மக்களும் காத்து கொண்டிருக்கின்றனர். எனவே அன்றைய தினம் மேலும் சஸ்பென்ஸ் வைக்காமல் பட்டுனு சொல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஊழல் கறை படியாத விரலை பிடித்து கொண்டு செல்ல மக்கள் விரும்புகின்றனர். அது ரஜினியின் தனிக் கட்சியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, இருக்கும் கட்சிகளை கை காட்டுவது அல்ல. ரசிகையின் ஏக்கம் நிறைவேறுமா?