ஆண்டாள் விவகாரம் குறித்து அறிந்த தமிழிசைக்கு தமிழ்த்தாய் விவகாரம் அறியாமல் போனது ஏனோ?
ஆண்டாள் விவகாரம் குறித்து தெரிந்திருந்த தமிழிசைக்கு தமிழ்த் தாய் விவகாரம் குறித்து தெரியாமல் போனது ஏனோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: ஆண்டாள் விவகாரம் குறித்து வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசைக்கு தமிழ்த் தாய் விவகாரம் குறித்து தெரியாமல் போனது ஏனோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழாமல் இல்லை.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் தினசரி செய்தித்தாள் ஒன்று ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆண்டாள் குறித்து மற்ற எழுத்தாளர்கள் குறிப்பிட்ட கருத்துகளை மேற்கோள் காட்டினார்.
அப்போது ஆண்டாள் குறித்து அவதூறாக ஒரு கருத்தை அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டம்
வைரமுத்து இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் அவர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். இதை தொடர்ந்து அவரிடம் அறநிலையத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க வைரமுத்துவுக்கு காலகெடு விதித்துவிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார். இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின்னர் தனது உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தார்.
சிறுவர்- சிறுமிகள் போராட்டங்கள்
ஆங்காங்கே ஆண்டாள் வேடமிட்ட சிறுமிகள் போராட்டத்தில் ஈடுபடுவதை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் வைரமுத்துவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். அவர்களது கண்டனங்களையும் பதிவு செய்தனர். இந்த விவகாரம் சற்று ஆறியுள்ள நிலையில் மற்றொரு விவகாரம் கிளம்பியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழவில்லை
சென்னையில் ஒரு நூல் வெளியிட்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆளுநர் உள்பட் அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் விஜயேந்திரர் மட்டும் எழுந்திருக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் பாடியபோது மட்டும் அவர் எழுந்து நின்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழிசைக்கு தெரியாதாம்
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விஜயேந்திரருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பியதற்கு, விஜயேந்திரர் தமிழ்த்தாய் விவகாரம் குறித்து நான் கவனிக்கவில்லை என்று கூறி உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஆண்டாள் சர்ச்சை குறித்து அன்றைய தினமே கண்டனங்களால் வசைபாடிய தமிழிசைக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து எதுவும் தெரியாதது ஏனோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.