ஜெயலலிதா மரணம்.. விசாரணைக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடாதது ஏமாற்றம்- பொன் ராதாகிருஷ்ணன்
ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணைக்கு உத்தரவிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் ஆதங்கப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்வராக முறையாக திங்கள்கிழமை பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, மேலும் 500 மதுக்கடைகளை மூடுவது என்று அறிக்கையில் தெரிவித்தது வரவேற்கதக்கது.
எனினும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அதை தற்போதைய புதிய முதல்வர் தனது முதல் அறிக்கையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் அதுபோன்ற அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றம் மட்டுமே விஞ்சியது.
தமிழக சட்டசபையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல. இரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் நடந்து கொண்டனர். இது சட்ட சபை வரலாற்றில் மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருவதால் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று அவர் கூறினார்.