ஆமா.. காவல்துறைக்கு சொல்லாமல் ஐடி ரெய்டு ஏன்? சந்தேகமா இருக்கிறதே.. பாயிண்ட் பிடித்த ஆர்.எஸ் பாரதி
சென்னை: காவல்துறைக்கு சொல்லாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வது சந்தேகம் அளிப்பதாக திமுகவின் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் முறை நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் உறவினர்கள் என தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ் பாரதி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐடி, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டி விடலாம் என எண்ணுகிறார்கள். வருமான வரித்துறை சோதனை பற்றி கவலை இல்லை. எமர்ஜென்சியை பார்த்த திமுகவினர் இந்த சோதனை எல்லாம் கண்டு அஞ்ச மாட்டார்கள். கர்நாடகத் தேர்தலில் பாஜவினர் ரூ.2 ஆயிரம் நோட்டை விநியோகம் செய்தனர் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது. கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அளித்து இருக்கிறார்கள்.
கர்நாடக மாநில தேர்தல் முடிவு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2024 மக்களவை தேர்தலில் மேன் ஆப் தி மேட்ச் ஆக முதல்வர் மு.க ஸ்டாலின் இருப்பார். முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு சென்று தினமும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் இதை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் முதல்வர் தமிழகத்தில் இல்லாத நேரத்தில் பாஜக அரசு வருமான வரி சோதனை மேற்கொண்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அண்ணாமலை திட்டமிட்டு டார்க்கெட் செய்கிறார். பாஜகவை பற்றி தெரிந்து கொள்வீர்கள் என அண்ணாமலை பகிரங்கமாக அண்மையில் பேசியிருந்தார். பாஜக என்றால் என்ன? அதன் அதிகாரம் என்ன என்பதை இன்னும் 10 நாளில் செந்தில் பாலாஜி சந்திப்பார் என்று பகிரங்கமாகவே அண்ணாமலை சொன்னார்.
மாநில காவல்துறைக்கு சொல்லாமல் வருமான வரித்துறை சோதனை நடத்துவது சந்தேகம் அளிக்கிறது. காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் ஐடி ரெய்டு நடத்தப்பட்டால் திமுக தொண்டர்கள் சந்கேகத்தின் காரணமாக அதை எதிர்ப்பார்கள். கலாட்டா ஏற்படும். திமுகவிற்கு களங்கம் கற்பிக்கலாம் என்பது இப்படி ஒரு முன்னேற்பாடு இல்லாத சோதனைக்கு காரணமாக இருக்கும் என்று சந்தேகமாக உள்ளது. எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப்பற்றி கவலை இல்லை.
யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க நாங்களும் தயராக இருக்கிறோம். கர்நாடக தேர்தலுக்கு பிறகு எல்லா எதிர்க்கட்சிகளும் வேகமாக இணையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இதை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதுபோன்ற சோதனைகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.