ஐஏஎஸ் தேர்வுகளில் கூட இல்லாத கெடுபிடிகள் நீட் தேர்வுக்கு ஏன்?... தமிழகம் என்ன கிள்ளுகீரையா?
மாநில ஆலோசகராக, மாவட்ட நிர்வாகியாக பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் ஐஏஎஸ் தேர்வுகளுக்குக் கூட நீட் தேர்வுக்கு காட்டப்பட்ட கட்டுப்பாடுகள் காட்டப்படுவதில்லை.
சென்னை: மாநில ஆலோசகராக, மாவட்ட நிர்வாகியாக பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் ஐஏஎஸ் தேர்வுகளுக்குக் கூட நீட் தேர்வுக்கு காட்டப்பட்ட கட்டுப்பாடுகள் காட்டப்படுவதில்லை.
மத்திய அரசு தேர்வாணையம் மூலம் அகில இந்திய குடிமை பணிகள் (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) , இந்திய வெளியுறவு பணி (ஐஎஃப்எஸ்), இந்திய அஞ்சல் பணி (ஐபிஎஸ்), இந்திய வருவாய் துறை பணி, ரயில்வே துறை, கணக்கு துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்டவைகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் என்பதால் இந்த பணிகளுக்கு 3 நிலையிலான தேர்வுகள் நடத்தி அதன் அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுகின்றன.
தேர்வுக்கான விதிமுறைகள்
ஐஏஎஸ், ஐபிஎஸ், வெளியுறவுத் துறை உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளின் போது தேர்வு எழுதுவோர் செல்போன், செல்போன் தொழில்நுட்பம் கொண்ட வாட்சுகள், புளூடூத் உள்ளிட்ட மின் சாதனங்கள், புத்தகங்கள், கையேடுகள் ஆகியன மட்டுமே கொண்டு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகப் பணி
ஒரு மாவட்டத்தை நிர்வகித்தல், மாநில தலைமை செயலாளர், முதல்வர், பிரதமர், அமைச்சர்களின் தனி செயலாளர், வெளியுறவுத் துறை செயலாளர் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பான பணிகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் மத்திய அரசு அத்தகைய மாணவர்களிடம் கெடுபிடிகளை காட்டுவதில்லை.
நீட் தேர்வு
ஆனால் மருத்துவ சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் நேற்று நடத்தப்பட்ட மத்திய அரசின் நீட் தேர்வின் போது எத்தனை கெடுபிடிகள், எத்தனை கட்டுப்பாடுகள். துப்பட்டா, பர்தா ஆகியவற்றை மாணவிகள் அணியக் கூடாது. தலைப்பின்னி இருத்தல் கூடாது, மூக்குத்தி, கம்மல், கொலுசு உள்ளிட்ட அணிகலன்கள் அணிய கூடாது. மாணவர்களின் சட்டை காலர்களில் ஏதேனும் துண்டுச் சீட்டுகள் உள்ளனவா என்று சிபிஎஸ்இ வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
முறைகேடை தடுக்க இந்த முறை..
தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க இந்த வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது என்று மத்திய அரசு சாக்கு போக்கு கூறினாலும் மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மட்டும் முறைகேடுகள் நடக்காது என்று நம்புகிறதா? 16 வயதே நிரம்பிய மாணவர்களை தீவிரவாதிகளை சோதனையிடுவதை போல் சோதனை நடத்துவது என்ன நியாயம்? சேவை மனப்பான்மை என்றாலும் அதிக ஊதியம், லட்சியம் காரணமாக குடிமை பணிகள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை. ஆனால் பணம் கட்டி படித்து, நீட் தேர்வு என்றால் என்னவென்றே தெரியாத பயிற்சி நிறுவனங்களில் பணத்தை வாரி இறைத்து படித்துவிட்டு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் ஏன்?
கண்காணிப்பில் நம்பிக்கை இல்லை....
அவ்வாறெனில் மத்திய அரசு அதிகாரிகள் கண்காணிக்கும் பணிகளில் அரசுக்கு நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம். ஷாப்பிங் மால்களில் உள்ள தியேட்டர்களில் இத்தகைய மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை நடத்தினாலே நாம் முகம் சுளிக்கிறோம். இதுபோல் செய்வது மனித உரிமை மீறல்கள் இல்லையா. வடமாநிலங்களில் மட்டும் இத்தகைய கெடுபிடிகள் இல்லையெனில் தமிழகம் மட்டும் என்ன மத்திய அரசின் கிள்ளு கீரையா? மத்திய அரசை பற்றியும், மோடியை பற்றியும் யாரும் விமர்சிக்கக் கூடாது என்று தடா போடும் தமிழிசை, பொன்.ராதா உள்ளிட்டோர் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்?