'நோ' வேஷ்டி, சட்டை... தினகரனின் தனி ஸ்டைலுக்கு இந்த சபதம் தான் காரணமாம்!
இரட்டை இலையை மீட்டுவிட்டுத் தான் வேஷ்டி கட்டுவேன் என்று ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : இரட்டை இலையை மீட்டுவிட்டுத் தான் கரை வேஷ்டி கட்டுவேன் என்று ஆர்கே நகர் சுயேச்சை எம்எல்ஏ தினகரன் கூறியுள்ளார். வழக்கமாக சட்டசபை செல்லும் அரசியல்வாதிகள் வெள்ளை வேஷ்டி, சட்டையில் தான் வருவார்கள், ஆனால் ஆர்கே நகர் தொகுதியின் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்று இன்று முதன்முதலாக சட்டசபைக்கு வந்த தினகரன் பேண்ட் சட்டை அணிந்து வந்து அதிலும் தனி ஸ்டைலை காட்டினார்.
அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை வேஷ்டி, சட்டை தான் அவர்களின் அடையாளம். சட்டசபைக்கு செல்லும் எம்எல்ஏக்களுக்கென்றே சிறப்பான வெள்ள வேஷ்டி, சட்டைகள் உள்ளன. இதனாலேயே இந்த ரக வேஷ்டிகளுக்கு மினிஸ்ட்ர் வேஷ்டி, சட்டைகள் என்ற பெயரும் கூட உள்ளது.
இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் சட்டசபையில் இன்று தொடங்கியது. இதில் கடந்த மாதம் ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற தினகரனும் வந்திருந்தார்.
தனி ஒருவராக வந்த தினகரன்
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த தினகரன் அரசியல் மாற்றங்களால் சுயேச்சை வேட்பாளராகி, சுயேச்சை எம்எல்ஏவாக சட்டசபைக்கு வந்தார். தனி ஆளாக தினகரன் சட்டசபைக்கு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தில்லாக உட்கார்ந்திருந்த தினகரன்
சட்டசபையில் தினகரனுக்கு எத்தனையாவது இருக்கை, அவருக்கு அருகில் யார் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்ற அனைத்துமே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் இருக்கைக்கு அருகில் தினகரனுக்கு 148வது இருக்கை எண் ஒதுக்கப்பட்டிருந்தது.
அவர் அருகில் மற்ற எம்எல்ஏக்கள் யாரும் இல்லை.
அனைவரின் கவனமும்
எனினும் ஆளுநரின் உரை முழுவதையும் கவனித்து கேட்டு அதில் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டு எந்த இலக்குமே இல்லாத உரை இது என்று கருத்து தெரிவித்தார். சட்டசபைக்கு தனி ஆளாக தினகரன் வந்ததோடு, அவர் பேண்ட் சட்டை அணிந்து வந்திருந்ததும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் வழக்கமாக அரசியல்வாதிகள் வரும் உடையில் இல்லாமல் இருந்ததற்கும் காரணம் இருக்கிறதாம்.
தினகரனின் வெளிப்படையான பேச்சு
சென்னையில் செய்தியாளர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் டிடிவி. தினகரன் நேற்று சந்தித்துள்ளார். அப்போது வெளிப்படையாக பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் தினகரன். ஆர்கே நகர் தொகுதியில் தொப்பி சின்னம் வேண்டும் என்று தாங்கள் விடாப்படியாக இருந்ததற்கும் காரணம் இருக்கிறது என்றாராம்.
தொப்பி கிடைக்காது என தெரியும்
தேர்தல் ஆணையம் எங்கள் தரப்பை பழிவாங்குகிறது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் தான் வேண்டுமென்றே உச்சநீதிமன்றத்தில் செலவு செய்து வழக்கு போட்டோம். ஆனால் குக்கர் சின்னம் தான் வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து வைத்துவிட்டோம். அதை ரகசியமாகவே வைத்திருந்தோம், தொப்பி சின்னம் தான் வேண்டுமென்று வெளி உலகிற்கு மட்டுமே நாங்கள் வலியுறுத்தி வந்தோம் என்றாராம்.
ஏன் வேஷ்டியில் வரவில்லை?
அப்போது ஒரு செய்தியாளர் மேடையில் இருக்கும் அனைவருமே வேஷ்டி, சட்டையில் இருக்கும் போது தினகரன் மட்டும் பேண்ட், சட்டையில் இருப்பது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டதாம். அதற்கு கூட்டத்திற்கு போனால் அனைவரும் இழுத்துவிடுகின்றனர் அதனால் தான் பேண்ட், சட்டைக்கு மாறினேன் என்று கூறினாராம். பின்னர் இரட்டை இலையை மீட்பது ஒன்றே என்னுடைய லட்சியம், அதை மீட்டுடு விட்டுத் தான் கரை வேட்டி கட்டுவேன் என்றும் செய்தியாளர்கள் மத்தியில் சபதம் போட்டாராம். இதன் காரணமாகவே இன்றும் அவர் சட்டசபைக்கு பேண்ட் சட்டை அணிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.