அமித்ஷா வரும்போதெல்லாம் போய் சந்திக்கணுமா? ‘நாங்க பிரதான எதிர்க்கட்சி’ - சீறிய எடப்பாடி பழனிசாமி!
மயிலாடுதுறை : சென்னைக்கு வரும் போதெல்லாம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட வேலையாக வந்த அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான கட்சி, நாங்கள் வேறு, அவர்கள் வேறுய என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொள்ளுமாறு பாஜக கூறுவதை விரும்பாத எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்கு பாஜக ஒத்துவரவில்லை என்றால் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவை சீண்டும் வகையில் பேசியுள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேசமயம், பாஜக தலைமை, ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைப்பை வலியுறுத்தி வருவதாகவே தெரிகிறது. அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பிடித்து வருகிறார். 2024 லோக்சபா தேர்தலைக் குறிவைத்து தாங்கள் கூறும் அறிவுரையை எடப்பாடி பழனிசாமி கேட்காமல் பிடிவாதம் பிடிப்பதை பாஜக தலைமை ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எடப்பாடி அதிருப்தி
சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நேரம் கேட்டிருந்த நிலையில், தனியாகச் சந்திக்க வாய்ப்பில்லை எனக் கூறி, விமான நிலையத்தில் வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அருகருகே நின்று வரவேற்றனர். 60 எம்எல்ஏக்கள் செல்வாக்கு, 90 சதவீத கட்சி நிர்வாகிகளின் ஆதரவு என இருந்தும், பாஜக மேலிடம், தன்னையும், பன்னீர்செல்வத்தையும் ஒரே மாதிரி நடத்துவதால் பாஜக மீது எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈபிஎஸ் விரும்பவில்லை
ஓபிஎஸ்ஸுக்கு அறிவுரை கூறாமல், தன்னை இணக்கமாகச் செல்ல வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்துவதையும் எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதனால் தான் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஈபிஎஸ் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்காதது பற்றி அரசியல் அரங்கில் விவாதங்கள் எழுந்தன. கடந்த சில நாட்களாகவே, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறவும் தயார் என்ற திசையை நோக்கி எடப்பாடி பழனிசாமி அடியெடுத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது.

தனித்தே போட்டி
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனது தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்க வேண்டும், அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை என தனது ஆதரவாளர்களிடம், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் பொதுக்கூட்டத்திலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி எனப் பேசி பரபரப்பைக் கிளப்பினார். கூட்டணிக்கு பாஜக ஒத்து வரவில்லை என்றால், அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பயணம்
எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கைகள், பாஜக மேலிடத் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, போர்வை, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அமித்ஷாவை சந்திக்க அவசியம் இல்லை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்த நிலையில், நீங்கள் ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தார். சென்னைக்கு வரும் போதெல்லாம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது அரசு வேலையாக வந்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சந்திப்போம். தனிப்பட்ட வேலையாக வந்த அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.

நாங்க வேற அவங்க வேற
பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு. அமித்ஷா, பிரதமர் மோடி எப்போது சென்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி சென்று பார்க்க வேண்டுமா? 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும்." எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications