கணவன் மனைவி குடும்ப சண்டை முற்றியது?- எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் குழப்பம்!
தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையேயான குடும்ப சண்டையால் பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் குழப்பம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கும் முட்டல் மோதல் அதிகரித்துள்ளதால் ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் போட்டி போட்டுக்கொண்டு நிர்வாகிகளை அறிவித்து வருவதால் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் குழப்பம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் சசிகலா. அவரது தலைமையை ஏற்க முடியாதவர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பின்னால் சென்றனர். மாநிலம் முழுவதிலும் இருந்தும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்த தொண்டர்கள் தி. நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்று ஆதரவை தெரிவித்தனர்.
இதனையடுத்து எம்ஜிஆர் பிறந்தநாளில் தனது முடிவை அறிவிப்பேன் என்று கூறிய அவர், ஜனவரி 17ஆம் தேதியன்று தன்னுடைய அரசியல் பயணம் தொடங்குவதாக கூறினார். ஜெயலலிதா பிறந்தநாளில் அரசியல் நிலைப்பாட்டை தொண்டர்களுக்கு தெரிவிப்பேன் என்றார் தீபா.
இதற்கிடையே ஓபிஎஸ் தலைமையில் அணி உருவானது. தீபாவும் சில வாரங்களுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் என்ன நினைத்தாலே பிப்ரவரி 24ஆம் தேதியன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். கொடியை அறிமுகம் செய்தார்.
நிர்வாகிகள் நியமனம்
பேரவை நிர்வாகிகள் நியமத்தில் தொடங்கிய சண்டை கணவன் மனைவி சண்டையாக மாறியுள்ளது. சில தினங்களுக்க முன்பு தீபா 32 மாவட்டங்களுக்க பேரவை நிர்வாகிகளை நியமனம் செய்தார். ஆனால் தீபாவின் கணவர் மாதவனோ தனக்கும் தீபா பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்.
குடும்பத்தில் பிரச்சினை
சில அறிக்கைகளில் தீபா கையெழுத்து இருப்பதில்லை. . மாவட்டங்களில் பொறுப்பாளர்களை அறிவிப்பதில் தெளிவில்லாமல் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீபா வீட்டுக்கு வரும் நிர்வாகிகள், தீபாவை சந்திக்க முடியாத நேரத்தில் மாதவனைச் சந்தித்துதான் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்துவந்தனர்.
எது ஒரிஜினல்?
சனிக்கிழமையன்று நள்ளிரவில், பேரவைக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனை வெளியிட்டது மாதவன்தான். இந்தத் தகவலை தீபா மறுத்தார். மாதவன் சொல்லும் நபர்களுக்குப் பதவி கொடுக்க தீபா மறுத்து வருவதால், குடும்பச் சண்டை உச்சத்தில் இருக்கிறது. இதனால், யார் வெளியிட்ட பட்டியல் ஒரிஜினல் என்ற குழப்பம், அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் நீடிக்கிறது.
முதல்வராக்குவேன்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள், தீபாவிற்காக உழைத்த உண்மையான தொண்டர்கள். தீபாவை முதல்வராக்கி, அழகு பார்க்கும் வரை தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் மாதவன். தினசரி அரங்கேறும் கூத்துக்களால் பலர் ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது. முன்பு போல இப்போது தொண்டர்கள் யாரும் தீபா வீட்டிற்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
தலையிட மாட்டார்கள்
அதே நேரத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய தீபா, பேரவை நிர்வாகத்தில் தனது குடும்பத்தினர் தலையிட மாட்டார்கள் என்று கூறினார். மேலும் அவர், தான் அரசியலுக்கு வருவதை தடுக்கும் நோக்கில் பலர் சதிச்செயலில் ஈடுபடுவதாகவும் கூறினார். என் தலைமையில் ஒன்றுபட்டு தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்.
உண்மை தொண்டர்கள்
சின்னப்பிள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராது என்று ஒரு கிராமத்து பக்கம் சொல்வார்கள் அது போல இருக்கிறது தீபாவின் செயல்பாடுகள். அவருக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் நடக்கும் சண்டைகள் குறித்து பேசுவதில் உடன்பாடில்லை.அது அவரது பர்சனல் விஷயம் என்று கூறினாலும் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களை தீபா ஏமாற்றாமல் இருக்கவேண்டும் என்றே பலரும் கூறுகின்றனர்.