இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றப்படுமா?: திருமாவளவன்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் அதில் நிறைவேற்றப்படுமா? என்ற ஐயம் எழுந்துள்ளது. அமெரிக்கா கொண்டுவர விருக்கும் தீர்மானத்தின் வரைவு தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், இனப் படுகொலை தொடர்பாகவோ, பன்னாட்டு விசாரணை வேண்டுமென்றோ எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
முதல்நாள் கூட்டத்தில் உரையாற்றிய கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிக்க பன்னாட்டு விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து இந்தியா இதுவரை கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காக்கிறது. வரைவுத் தீர்மானத்தைப் பார்த்துவிட்டுத்தான் தமது கருத்தைத் தெரிவிப்போம் என அது கூறி வருகிறது. வரைவுத் தீர்மானம் இப்போது வெளியாகியுள்ள நிலையில் இனப்படுகொலையை விசாரிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணை தேவை என இந்தியா வலியுறுத்த வேண்டும். காலம் தாழ்த்தாமல் இந்திய அரசு தமது கருத்தை வெளியிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.