ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு.. தமிழகத்திற்கும், திராவிடத்திற்கும் ஏன் முக்கியம் தெரியுமா?
Recommended Video
சென்னை: திராவிட கொள்கைகள் மீதான தாக்குதல்கள் பல முனைகளில் இருந்தும் வரும் சூழலில் திமுக ஈரோட்டில் நடத்தும் மண்டல மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவு மற்றும், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு ஆகியவற்றால் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு, புதுப்புது கட்சிகள் உதயமாகிக்கொண்டுள்ளன.
இவர்களில் பெரும்பாலானோர் கோஷம், திராவிட அரசியல் மீதான விமர்சனமாக உள்ளது. ரஜினிகாந்த் புதிதாக ஆன்மீக அரசியல் என்ற கோஷத்தை முன் வைத்துள்ளார்.
வலதுசாரி தாக்குதல்
இவர்களை விட முக்கியமான பிரச்சினையை திராவிட இயக்கங்கள், பாஜக மற்றும் அதை சார்ந்த அமைப்புகள் மூலம் எதிர்கொள்கின்றன. திராவிட இயக்கங்கள் மற்றும் திமுக போன்ற திராவிட கொள்கையுள்ள கட்சிகள் மீது சமூக வலைத்தளங்களில், வலதுசாரி கட்சிகள், அமைப்புகள் தீவிர விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.
பெரியார் சிலைகள்
முன் எப்போதும் இல்லாத வகையில், பெரியார் கொள்கைகளும், அவரது வாழ்க்கையும் எதிரணியினரால் கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன. பெரியார் சிலைகளை உடைப்போம் என்ற மிரட்டல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. சில இடங்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், மாநில சுயாட்சிக்கு மத்திய அரசு வேட்டு வைத்து வருகிறது. கல்வி உரிமையை கூட மத்திய அரசு எடுத்துக்கொண்டு நீட் என்ற தேர்வை புகுத்தியது.
தென் மாநிலங்கள் கோபம்
இவ்வாறு திராவிட இயக்கங்களின் மாநில சுயாட்சி, தமிழுக்கு முன்னுரிமை, இட ஒதுக்கீடு போன்ற முக்கிய கொள்கைகளுக்கு வேட்டு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தென் மாநிலங்களில், வட இந்திய பாணி அரசியலுக்கு எதிரான அலை எழத் தொடங்கியுள்ளது. சந்திரபாபு நாயுடு, சித்தராமையா போன்ற தென் மாநில முதல்வர்கள் இதற்கான அச்சாரத்தை போட்டுவிட்டார்கள். இந்த சூழலில், மாநில உரிமைகளுக்கும், ஹிந்தி எதிர்ப்புக்கும் வெகு காலம் முன்பே குரல் கொடுத்த தமிழகம் தனது எழுச்சியை, திமுகவின் மண்டல மாநாடு மூலம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திமுகவிற்கு அவசியம்
ஆளும், அதிமுகவை பொறுத்தளவில், மாநில சுயாட்சி, ஹிந்தி எதிர்ப்பு, வலதுசாரி எதிர்ப்பு ஆகியவற்றில் வலுவான குரலை எழுப்பாமல் உள்ளது. இந்த நிலையில், திராவிட கொள்கைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க திமுக கிளர்த்தெழுந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. திராவிட சித்தாந்தகள் என்ன, இட ஒதுக்கீடு ஏன் அவசியம், மொழி உரிமை, மாநில சுயாட்சிக்கான அவசியம் என்ன என்பதை மீண்டும் மக்களிடம் கொண்டு சென்று பதிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. திமுக என்ற தனிப்பட்ட கட்சி வளர்ச்சிக்கும் இது உரம் சேர்ப்பதோடு, மாநில சுயாட்சிக்கும், சமூக நீதி கொள்கைகளுக்கும் இது அத்தியாவசிய தேவை. பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில், இன்று தொடங்கியுள்ள திமுக மண்டல மாநாடு, இந்த பாதையில் பயணிக்க ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள முதல் அடி என்றே பார்க்கப்படுகிறது.