உள்ளாட்சியோடு ஓடிப் போவார் தினகரன்!- எடப்பாடி பழனிசாமியின் 'திடீர்' வியூகம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலோடு தினகரனின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
' அதிகபட்சமாக எட்டு சதவீத வாக்குகளை அவர் வாங்கலாம். இந்தத் தேர்தலோடு அரசியலைவிட்டே ஓடிப் போய்விடுவார் தினகரன். பா.ம.க அளவுக்குத்தான் அவருக்கான வாக்கு வங்கி அமையப் போகிறது' எனப் பேசியிருக்கிறார் முதல்வர்.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார் தினகரன். ' மாநிலம் முழுவதும் ஒரே சின்னம் வேண்டும் என்றால், தனிக்கட்சி இருந்தால்தான் முடியும். இல்லாவிட்டால், மக்கள் மத்தியில் நாம் தனித்துத் தெரிய மாட்டோம். அ.தி.மு.கவுக்கு எதிரான வாக்குகளையும் நம்மால் அறுவடை செய்ய முடியும்' எனப் பேசி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஆட்சிக்கான வாய்ப்பு
அதேநேரம், உள்ளாட்சித் தேர்தலை தனது ஆட்சிக்கான நல்ல வாய்ப்பாகக் கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதைப் பற்றி அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விரிவாகப் பேசியிருக்கிறார். ' கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட கொங்கு மண்டலத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பெருவாரியாக நாம் வெற்றி பெறப் போகிறோம். இந்த இடங்களில் எல்லாம் தினகரனுக்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பும் இல்லை.

ஸ்டாலினுக்குக் கடும் அதிர்ச்சி!
நேரடி தேர்தல் முறையை அறிவித்ததன் மூலம் தி.மு.கவும் தினகரனும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதிகப்படியான வார்டுகளில் வென்றால், மேயராகலாம் என்ற கனவில் இருந்தனர் தி.மு.கவினர். அவர்களுக்கு எல்லாம் பெரும் இடியைக் கொடுத்திருக்கிறோம். தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் அதிகமாகிவிட்டது. அம்மா இருந்தபோது அவர்கள் பெற்ற வாக்குகளைவிட அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டனர். உள்ளாட்சி மூலம் தொண்டர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கலாம் எனக் கனவு கண்டு கொண்டிருந்தார் ஸ்டாலின். ஆர்.கே.நகருக்குப் பிறகு உள்ளாட்சியிலும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கிடைக்கப் போகிறது. அசுரபலத்தோடு நாம் தேர்தலை சந்திப்போம்' எனக் கூறியிருக்கிறார்.

அந்த நான்கு பேர்!
முதல்வரின் வியூகம் குறித்த நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், " அம்மாவால் நியமிக்கப்பட்ட கட்சிக்காரர்களை நீக்கக் கூடாது என்றுதான் ஆரம்பம் முதலே பேசி வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதுவே கட்சிக்குள் புல்லுருவிகளை வளர்த்துவிட்டதால், அதைக் களையெடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்த தினகரன் ஆதரவாளர்களை அடியோடு நீக்கிவிட்டார். எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேராசிரியர் தீரன் வெளிப்படையாவே தினகரனை ஆதரித்தார். அ.தி.மு.கவில் இருந்து அறிவிக்கப்பட்ட 12 செய்தித் தொடர்பாளர்களில் ஐந்து பேர் மட்டும்தான் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வந்தனர். அவர்களில் தீரனும் நீக்கப்பட்டுவிட்டார். அ.தி.மு.க அரசின் செய்திகளை எடுத்துரைக்க வெறும் நான்கு பேர் மட்டும்தானா என்ற குரலும் கட்சிக்குள் எழுந்துள்ளது.

இது இறுதி யுத்தம்!
வரும் நாட்களில் புதிய செய்தித் தொடர்பாளர்களை நியமிக்க இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் வலுவான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு பணத்தை வாரியிறைப்பவர்களுக்கே பதவி கிடைக்க இருக்கிறது. ஒவ்வொரு வேட்பாளர்களையும் கவனமாகத் தேர்வு செய்ய உள்ளனர். தினகரன், ஸ்டாலினுக்கு எதிரான அடுத்தகட்ட யுத்தமாகவே உள்ளாட்சியைப் பார்க்கிறார் முதல்வர்" என்றார்.












Click it and Unblock the Notifications