ஜனாதிபதி அனுமதி பெறாமல் மாஜி நீதிபதி கர்ணனை எப்படி கைது செய்யலாம்? வழக்கறிஞர் பேட்டி
சென்னை: குடியரசுத் தலைவர் அனுமதி பெற்றுதான் உயர்நீதிமன்ற நீதிபதியை கைது செய்ய வேண்டும் என்று மாஜி நீதிபதி கர்ணன் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடன் கர்ணன் தலைமறைவாகிவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக மேற்கு வங்க போலீசார் தனிப்படை அமைத்து நீதிபதி கர்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் கோவை அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் கர்ணன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 தனிப்படை போலீசார் மூன்று நாட்கள் நோட்டமிட்டமிட்டிருக்கிறார்கள். நீதிபதி கர்ணனின் செல்போன் சிக்னல்களை கொண்டு அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் இன்று மாலை அவரை கைது செய்தனர். கைது செய்ய சென்ற போலீஸாரிடம் நீதிபதி கர்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் முன்னாள் நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் பீட்டர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியரசுத் தலைவர் அனுமதி பெற்றுதான் உயர்நீதிமன்ற நீதிபதியை கைது செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யாரும் இதுவரை கைது செய்யப்பட்டதாக வழக்கு முன் உதாரணம் எதுவும் இல்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications