குளிக்கும்போது வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர்.. 2 குழந்தைகளின் தாய் தீக்குளிக்க முயற்சி
திருச்சி: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் ஏன் அவ்வாறு செய்தார் என்பது குறித்த பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அனிதா ( 30 வயது). இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் வந்திருந்த அனிதா அனிதா திடீரென தீக்குளிக்க முயன்றார். இருப்பினும் போலீசாரால் தடுத்து காப்பாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதி
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை அங்கு பணியில் இருந்த பெண்காவலர்கள் காப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
தீக்குளிக்க காரணம்
தீக்குளிக்க முயற்சித்தது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அனிதா தான் தீக்குளிக்க காரணமான திடுக்கிடும் சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்தார். அனிதா வீட்டருகே வீடியோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார் ராசி என்பவரது மகன் வெற்றிவேல்.
குளிக்கும்போது வீடியோ
அனிதா ஒருநாள் வீட்டில் குளித்து கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு சொல்வதை கேட்க வேண்டும் என்றும். இல்லை என்றால் அதனை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்ட தொடங்கியுள்ளார்.
பணம் பறிப்பு
இதுவரை அனிதாவிடம் இருந்து இப்படி மிரட்டியே 16 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் வரை இதுவரை பறித்துக் கொண்டுள்ளார் வெற்றிவேல். இதுதவிர இன்னும் கூடுதலாக பணம் கெட்டு தொந்தரவு செய்து வருகிறார் என தெரிவித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு
மிரட்டலை சமாளிக்க முடியாமல்தான் தீக்குளிக்க முயன்றேன் என்று விசாரணையின் போது அனிதா வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி, உத்தரவின் பேரில் மங்கலம் பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து வீசாரணை செய்து வருகிறார்கள்.