சேலத்தில் 'போலி' பெண் கலெக்டர் கைது
சேலம்: சேலம் அருகே போலியாக அடையாள அட்டை தயாரித்து வைத்துக்கொண்டு கலெக்டர் என்று கூறி மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பரமணியம் மகன் சீனிவாசன். 27. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் தந்தைக்கு வைத்தியம் பார்க்க, உடுமலைப்பேட்டைக்குச் சென்றார். அங்கு தங்கியிருந்த சீனிவாசன், அப்பகுதியை சேர்ந்த அருணாதேவி, 26, என்பவரை சந்தித்தார். பின்னர், இருவரும் காதலித்து வந்தனர். அதையடுத்து, திருமணம் செய்து கொண்டு, இடைப்பாடிக்கு வந்தனர்.
அருணாதேவி, தான், சென்னை மாவட்டத்தில், பயிற்சி கலெக்டராக பணியாற்றி வருவதாக கூறிவந்தார். தன் உறவினர்களிடம் கடன் வாங்கிய அருணாதேவி, பயிற்சி கலெக்டரின் சம்பளம் என மாதம், 50 ஆயிரம் ரூபாயை, தன் கணவர் சீனிவாசனிடம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த கதிரவன் (27) என்பவருக்கும் நடைபாதை தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் சீனிவாசன் மற்றும் உறவினர்கள் சிலர், சென்னையில் அருணாதேவி கலெக்டராக பணிபுரிந்து வருவதாகவும், இதனால் அவரிடம் சொன்னால் போலீசில் வழக்குப்பதிந்து கைது செய்து விடுவதாகக்கூறி கதிரவனை தாக்கியதோடு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த கதிரவன், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கதிரவனால் தாக்கப்பட்டதாக, சீனிவாசன், 27, அவரது உறவினர்கள் செல்வம், சுப்பரமணி ஆகிய மூவரும், இடைப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக இடைப்பாடி போலீசில் கதிரவன் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பரமணியம், விசாரணை செய்து வந்தார். சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அருணாதேவி ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில், அரசு ஊழியர் அடையாள அட்டையை போலியாக தயாரித்து பொதுமக்களை ஏமாற்றி வந்ததும், அருணாதேவி சென்னையில் கலெக்டராக இருப்பதாக பொய்யான தகவலை பரப்பி பலரை ஏமாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அப்புசாமி கொடுத்த புகாரின்பேரில் இடைப்பாடி போலீசார் நேற்று இரவு வாலிபரை மிரட்டிய போலி கலெக்டர் அருணாதேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அருணாதேவியிடமிருந்து, முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டதாக வைத்திருந்த, போலி ஐ.ஏ.எஸ்., அடையாள அட்டையையும், பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அருணாதேவியிடம், சேலம் மாவட்ட எஸ்.பி., சக்திவேல், நேரடியாக விசாரணை செய்தார். பின்னர், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications