வருணன் மனம் இரங்கி மழை வரணும்... கரூரில் ஒப்பாரி வைத்து வழிபட்ட பெண்கள்!
கரூர்: கரூரில் மழை பெய்ய வேண்டி, பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபட்ட நூதன சம்பவம் நடந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஒரு பகுதி நிலப்பரப்பில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் மூலம் விவசாயம் செய்யப்பட்டும் மற்றொரு பகுதியில் வானம் பார்த்த பூமியாக (மழை) மூலமாக விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கரூா் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் ஆறுகள் இல்லாத பகுதியான கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் மழையை நம்பிதான் விவசாயிகள் உள்ளனா்.
தொடர்ந்து மழை பெய்யாததால் ஆடுகள், மாடுகள் போன்ற விவசாயம் சார்ந்த கால்நடைகள் கூட தண்ணீரின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் வருந்துகிறார்கள்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி உடையாகுளத்துப்பட்டி கிராம மக்கள் மழைபெய்ய வேண்டி நூதன பிராத்தனை செய்தனா். கிராமத்தில் உள்ள சிறுமிகள் தலையில் மண்பானை சுமந்து வீடு வீடாக சென்ற ஒட்டுக்கஞ்சி எனப்படும் கஞ்சியை யாசகமாக பெற்று ஊரில் உள்ள பொதுஇடத்தில் பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து கதறி அழுதனா். பிறகு அப்பகுதியில் உள்ள விநாயகா். பகவதி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனா்.
தொடா்ந்து அந்த கஞ்சி சட்டியை உடைத்தனா். இதனால் வருணபகவான் மனம் இரங்கி மழையாக பெய்வார் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனா்.
தொடர்ந்து பல்வேறு பகுதியில் பெண்கள் நூதனமுறையில் மழை வேண்டி வழிபாடு செய்ததால் கரூா் மாவட்டத்தில் இன்று கரூா், கே.பி.குளம், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.