முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெடுவாசல் போராட்டக்குழுவினர் இன்று பேச்சுவார்த்தை
நெடுவாசல் பிரச்சினை குறித்து, நெடுவாசல் போராட்டக்குழு பிரதிநிதிகள் இன்று முதல்வரை சந்திப்பர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் கொண்டுவருவதை எதிர்த்து போராடி வரும் நெடுவாசல் பகுதி மக்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
விவசாயிகளுடன் மிகுந்த அக்கறை கொண்டது 'அம்மாவுடைய' அரசு. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த இந்தியாவின் ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்.
கொங்கு மண்டலத்தில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டபோது எதிர்த்தவர் ஜெயலலிதா. நெடுவாசல் ஹைட்ரோகார்பன் விஷயத்திலும் விவசாயிகள் நலனை காப்போம் என உறுதியளிக்கிறேன்.
நெடுவாசல் பிரச்சினை குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் எடுத்து சொல்லியுள்ளோம். நெடுவாசல் போராட்டக்குழு பிரதிநிதிகள் இன்று முதல்வரை சந்திப்பர். மக்களின் குறைகளை கேட்டுக்கொள்ளும் முதல்வர், அதன்பிறகு, பிரதமரை சந்திக்க உள்ளபோது நெடுவாசல் பிரச்சினை பற்றி பேசுவார் என்றார்.
இதையடுத்து, போராட்டக்குழுவினர் அரசின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தனர்.