மத்திய காங். அமைச்சர்கள் பதவி விலகவேண்டும்... இளைஞர் காங். அதிரடி தீர்மானம்!
நாமக்கல்: காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸின் நாமக்கல் பிரிவு தீர்மானம் போட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்துள்ளது.
இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில், சட்டசபை தொகுதி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
நாமக்கல் லோக்சபா தொகுதிக்கான துணைத் தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். லோக்சபா தொகுதித் தலைவர்கள் சரவணன், செல்வநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், உலக தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்காத, ராஜபக்சே தலைமையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது.
ஊடகப்பிரிவில் பணியாற்றிய இளம்பெண் இசைப்பிரியாவை மானபங்கப்படுத்தி, சித்தரவதை செய்து கொலை செய்த இலங்கை ராணுவத்தை, சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த, இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்.
இக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டால், தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர்கள் அனைவரும், தமிழர்களின் உணர்வுகளை மதித்து, உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது.
இளைஞர் காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் பிரிவு போட்ட இந்த அதிரடித் தீர்மானத்தால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.











Click it and Unblock the Notifications