வேடிக்கை பார்க்கும் தமிழகமே விவசாயிக்காக போராடு... கைது செய்யப்பட்டவர்கள் தொடர் முழக்கம்!
சென்னை மெரினா கடற்கரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் போராடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
சென்னை: தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போலீஸ் வாகனத்தில் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட போதும் போராட்டக்காரர்கள் வேடிக்கை பார்க்கும் தமிழகமே விவசாயிக்காக வீதிக்கு வந்து போராடு என்று முழக்கங்களை எழுப்பினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் இருந்த கடற்கரைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்களை நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் முகநூல் மூலம் இணைந்த சிலர் சென்னை மெரினாவில் கடற்கரைப் பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழர்களுக்கு உரிமையான காவிரி நீரை பெற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி பதாகைகளுடன் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கான போராட்டம்
இளைஞர்களின் போராட்டத்திற்கு பொழுதுபோக்கிற்காக வந்த பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது நமது நாட்டு மாட்டு இனம், கலாச்சாரம் அழிந்து விடக்கூடாது என்று மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டோம். பாலுக்காக போராடினோம், இன்று தண்ணீருக்காகவும் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடுவோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் கைது
இளைஞர்கள் எங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரியாமல் போலீசார் கடற்கரை பகுதியில் சல்லடை போட்டு தேடினர். கடைசியில் போராட்டக்காரர்களை கண்டுபிடித்த போலீசார் அவர்களை கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர்.
வீதிக்கு வந்து போராடு
பெண்கள், இளைஞர்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட போதும், தொடர் முழக்கங்களை எழுப்பினர். வேடிக்கை பார்க்கும் தமிழகமே விவசாயிக்காக வீதிக்கு வந்து போராடு என்று போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.
ரோந்துப் பணி அதிகரிப்பு
தங்களின் போராட்டம் தனி மனித போராட்டமல்ல எங்களை கைது செய்து அழைத்து செல்லும் காவல்துறையினரின் குடும்பத்தினருக்கும் சேர்த்து தான் போராடுகிறோம் என்று இளைஞர்கள் தெரிவித்தனர். இளைஞர்களின் திடீர் போராட்டத்தால் கடற்கரை பகுதிகள் முழுவதிலும் போலீசாரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.