யுவராஜ் விரைவில் சரணடைவார்... மனைவி சுவிதா நம்பிக்கை
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவரும் யுவராஜ் விரைவில் சரண் அடைவார் என்று அவரின் மனைவி சுவிதா தெரிவித்துள்ளார்
பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். இந்த கொலை வழக்கில் ஒரு பெண் உட்பட 11க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கைதான சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நாமக்கல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் இன்று காலை 11 மணிக்கு விடுதலை ஆனார்கள்.
அவர்களை அழைத்துச் செல்ல யுவராஜின் மனைவி சுவிதா ஆத்தூர் வந்திருந்தார். அவர் 3 பேருக்கும் மாலை அணிவித்து வரவேற்க முயன்ற போது சிறை வளாகத்தில் மாலை அணிவிக்கக்கூடாது என்று போலீசார் கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து மாலை அணிவிக்காமல் அவர்களை சுவிதா அழைத்துச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுவீதா, "கோகுல்ராஜ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக விசாரித்து வருகிறார்கள். எனது கணவர் சரண் அடைய வாய்ப்புள்ளது" என்று கூறினார். அதன்பிறகு விடுதலையான 3 பேருடன் அவர் சங்ககிரி புறப்பட்டுச் சென்றார். அவர்கள் சங்ககிரியில் உள்ள தீரன்சின்னமலை மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். 3 பேர் விடுதலையையொட்டி ஆத்தூர் கிளைச் சிறை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஆத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள யுவராஜ் மூன்று மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார். அவ்வப்போது வாட்ஸ் அப், டிவி பேட்டிகள் மூலம் போலீசாருக்கு சவால் விடுத்து வருகிறார். இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக, சிபிசிஐடி பரிந்துரையின்பேரில், நாமக்கல் நீதிமன்றம் யுவராஜிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.