இந்த வயசுல நானே எழுதுறேன்.. உங்களுக்கு என்ன? நம்பிக்கையா இருங்க- நீட் தேர்வு எழுதிய 68வயது முதியவர்!
தஞ்சாவூர் : கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் 68 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் நீட் தேர்வை தஞ்சையில் எழுதியுள்ளார்.
Recommended Video
இளம் வயதில் மருத்துவராக வேண்டும் என்றிருந்த கனவை நனவாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் 68 வயதில் நீட் தேர்வு எழுதியுள்ளார் ராமமூர்த்தி.
நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நீட் தேர்வுக்கு 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இன்று நீட் தேர்வு
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடந்தது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில்
தமிழ்நாட்டில் 18 நகரங்களில் தேர்வு நடைபெற்றது. ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மையங்களில் 5 ஆயிரத்து 230 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நீட் தேர்வு எழுதுகின்றனர். இதேபோல் தஞ்சை வல்லம் அருகே உள்ள பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் 68 வயதான ராமமூர்த்தி என்பவர் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

68 வயதான ராமலிங்கம்
திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கமலி. இவர்களுக்கு அகிலா, கோகிலா ஆகிய 2 மகள்களும், முத்துராமலிங்கம் என்ற மகனும் உள்ளனர். படிப்பதற்காகவே தஞ்சை சிந்தாமணி பகுதியில் தற்போது வசித்து வருகிறார் ராமமூர்த்தி. சிறு வயது முதல் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவைக் கொண்ட ராமலிங்கம், பல்வேறு காரணங்களால் படிக்க முடியாத நிலையில் தனது 68 வயதில் இன்று அவர் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

28 பட்டங்கள்
நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பு ராமமூர்த்தி அளித்த பேட்டியில், "கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். இதுவரை எனது வாழ்நாளில் 28 பட்டங்களை பெற்றுள்ளேன். ஆனால் இள வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது வயது தளர்வு கிடைத்துள்ளதால் எனது 68 வயதில் தற்போது நீட் தேர்வு எழுதுகிறேன்" எனத் தெரிவித்தார்.

நம்பிக்கை
மேலும் நீட் தேர்வுக்காக தான் எந்த பயிற்சி மையத்திலும் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளவில்லை, கடந்த 3 மாதங்களாக உழைத்துள்ளேன் என்றும் நிச்சயமாக வெற்றி பெற்று மருத்துவராகி விடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தற்போது நீட் தேர்வால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்வது என்பது வேதனையான ஒன்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகத்தான் இந்த நீட் தேர்வை எழுதுவதாகவும் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எத்தனை முறை வேண்டுமானாலும்
மேலும், ஒரே முறையில் தேர்வில் வெற்றி பெற்று ஆகவேண்டும் என்ற அவசியமில்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். பல்வேறு சூழ்நிலை காரணமாக தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் பேட்டி கொடுப்பதால், இனிமேல் வயதானவர்கள் எழுத தடை போட்டாலும் போடுவார்கள். இளைஞர்களுக்கு அப்படி இல்லை. நிறைய காலம் இருக்கிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி வெற்றி பெறலாம் என நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளார்.

வயது தடையில்லை
இவரைப் போலவே கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியன் என்பவரும், தருமபுரியை சேர்ந்த 61 வயதான சிவபிரகாசம் என்பவரும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை விடவும் வயது மூத்தவரான ராமமூர்த்தி இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications