பாபநாசம் அருகே பலத்த காற்றால் மரம் விழுந்து பள்ளி மாணவி மரணம்! பதறிப்போன தொகுதி MLA ஜவாஹிருல்லா!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பலத்த காற்றால் மரம் விழுந்து பள்ளி மாணவி மரணம் அடைந்துள்ள நிலையில் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவி செல்வி சுஷ்மிதா (வயது 15) நேற்று (29-8-2023) மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையில் பள்ளியின் அருகிலுள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்

மேலும் இவ்விபத்தில் மற்றொரு மாணவி ராஜேஸ்வரி படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இவ்விபத்தில் இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதற்கும் காயமடைந்த மாணவிக்கு ரூ 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது மகள் சுஷ்மிதாவை இழந்து நிற்கும் அவரது பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள், ஊர் மக்கள், உடன் படித்த மாணவியர், அவரது ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவி இராஜேஸ்வரி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.












Click it and Unblock the Notifications