ஹோட்டலில் நோயாளிக்கு வாங்கிய இட்லி பார்சலில் இறந்து கிடந்த தவளை.. அப்படியே ஷாக்கான கும்பகோணம்!
கும்பகோணம்: கும்பகோணத்தில் ஹோட்டலில் இருந்து அரசு மருத்துவமனை நோயாளிக்கு பார்சல் வாங்கிச்சென்ற இட்லியில் தவளை இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன.
தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!
கும்பகோணம் மாடாகுடியை சேர்ந்த முருகேசன் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினருக்கு அந்த சாலையில் இருந்த தனியார் ஹோட்டலில் இருந்து சில இட்லிகளை பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.
இட்லியில் தவளை
பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்றவுடன் அந்த பார்சலை நோயாளி பிரித்து இட்லியை சாப்பிட முயன்றுள்ளார். அப்போது இட்லியில் தவளை ஒன்று இறந்து கிடந்தது. இதனை பார்த்த நோயாளிக்கு தூக்கி வாரிப்போட்டது. கடுமையாக அதிர்ச்சி அடைந்த நோயாளியின் உறவினர் உடனடியாக பார்சல் வாங்கி வந்த இட்லியை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலுக்கு சென்று ஹோட்டல் உரிமையாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
சமாதனம் செய்த ஹோட்டல் உரிமையாளர்
அப்போது ஹோட்டலில் இருந்தவர்கள் இட்லி வாங்கி சென்றவரை சமாதானப்படுத்தி உள்ளார். இதுபற்றி வெளியே கூற வேண்டாம் என்று கூறியபடி அவர் வாங்கிச் சென்ற இட்லிக்கு உண்டான பணத்தை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இட்லி ஊற்ற வைத்திருந்த மாவை இட்லி வாங்கியவரின் கண்முன்னே ஹோட்டல் உரிமையாளர் கீழே கொட்டி உள்ளார். இந்த பிரச்சனை பெரிதாக மாறக்கூடாது என்று கருதி ஹோட்டலை உடனடியாக பூட்டிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் வைரல்
ஆனால் ஹோட்டலில் இருந்த ஒரு நபர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இட்லியில் தவளை கிடந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்று பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சாப்பிடும் உணவை அஜாக்கிரதையாக சமைத்த ஹோட்டல் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதோடு, ஹோட்டலை மூடி சீல் வைக்க வேண்டும் என நகராட்சி சுகாதார துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
தமிழகத்தில் இதுபோல் சில ஹோட்டல்களில் தரமற்ற உணவுகள் விற்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த உணவினை சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. எனவே உணவு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் அடிக்கடி உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.