தயவு செய்து அழாதீங்க.. இதை வாங்கிக்குங்க.. சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு இயக்குநர்கள் ஆறுதல்
விவசாயி சுந்தர்ராஜன் குடும்பத்துக்கு இயக்குனர்கள் நிதியுதவி அளித்தார்கள்.
Recommended Video

தஞ்சை: "அழாதீங்க.. தயவு செய்து அழாதீங்க.. இதை வாங்கிக்குங்க" என்று சொல்லி தற்கொலை செய்து கொண்ட விவசாயி சுந்தரராஜன் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளித்து வருகிறார்கள் தமிழ் பட இயக்குநர்கள்.
புயல் போய் ஒரு வாரம் ஆன நிலையில், சினிமா டைரக்டர்கள் டெல்டா பக்கம் போய் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லியும், இயன்ற நிதி உதவிகளை அளித்தும் வருகிறார்கள்.
இதற்காக சென்னையில் இருந்து தஞ்சைக்கு பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சென்றது.

இயக்குனர்கள்
இந்த டைரக்டர்கள் குழுவில், வெற்றிமாறன், அமீர், தங்கம், திருமுருகன், தங்கசாமி, பாலமுரளிவர்மன், சுரேஷ் என பலரும் சென்றனர்.

ஆறுதல் சொன்னார்கள்
புயல் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்ட டைரக்டர்கள், உடைமைகளை இழந்தோரையும் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். பின்னர், ஒரத்தநாடு பகுதியில் தென்னை வீழ்ந்து போனதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சுந்தர்ராஜனின் குடும்பத்தினரையும் இந்த குழு நேரில் சென்று சந்தித்தது.

எங்களால முடிஞ்சது...
இயக்குனர்களை பார்த்தும் அந்த குடும்பத்தினர் மனம் வெடித்து அழுதார்கள். அப்போது சுந்தர்ராஜன் மனைவியிடம் டைரக்டர் வெற்றிமாறன், "தயவு செய்து அழாதீங்க.. இந்த உதவியை வாங்கிக்குங்க.. எங்களால முடிஞ்சது" என்று சொல்லி 50 ஆயிரம் ரூபாய் நிதி தந்தார்கள்.

கூட்டாக வேண்டுகோள்
இந்த குடும்பத்துக்கு மற்றவர்களும் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று டைரக்டர்கள் எல்லோரும் கூட்டாக வேண்டுகோளும் வைத்தார்கள்.












Click it and Unblock the Notifications