எல்லாம் “டைம்”.. தஞ்சை பேருந்து நிலையத்தில் “டமார்”.. ரிவர்ஸில் ஒரே முட்டு! அதிர வைத்த டிரைவர்
தஞ்சாவூர்: தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே நேர பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் பின்னால் பேருந்தை இயக்கி மற்றொரு பேருந்தின் மீது மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் முக்கிய நகரங்களான பட்டுக்கோட்டை, கும்பகோணம், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பேராவூரணி என பல பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் தஞ்சை மாநகர பேருந்துகளும், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மன்னார்குடி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் என பல மாவட்டங்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன.
தஞ்சாவூர் பேருந்து நிலையம்
குறிப்பாக தஞ்சை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை காட்டிலும் தனியார் பேருந்துகளே அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு சென்று வரும் தனியார் பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
தனியார் பேருந்துகள்
அதிலும் பட்டுக்கோட்டை, கும்பகோணம் மார்க்கமாக தஞ்சையில் இருந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் செல்வதுடன் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் ஆங்காங்கே விபத்துக்களும் ஏற்பட்டு உள்ளன.
வேகத்தில் போட்டி
இந்த வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு செல்வதும் வாடிக்கை. இதனால் தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே மோதல் சம்பவங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மோதிய பேருந்து
இன்று பேருந்துகள் புறப்படும் நேரத்தில் 2 தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு பேருந்தின் ஓட்டுநர், அதில் ஏறி ரிவர்ஸ் சென்று பின்னால் இருந்த மற்றொரு தனியார் பேருந்து மீது வேகமாக மோதினார்.
நொறுங்கிய கண்ணாடி
இதனால் மோதப்பட்ட பேருந்து சில அடிகள் பின்னால் நகர்ந்து சென்றது. ஆனால் அந்த பேருந்துக்கு பெரிதாக எந்த சேதமும் ஏற்படவில்லை. அதே நேரம் ரிவர்ஸ் சென்று மோதிய பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.