சிஐஎஸ்எஃப் வீரர்கள் பயிற்சியின்போது.. துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
தஞ்சாவூர்: புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் சிஐஎஸ்எஃப் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 30-ம் தேதி சிஐஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீரர் துப்பாக்கியிலிருந்து 2 தோட்டாக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் போய் விழுந்தது. அதில் ஒன்று முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்தது.

துப்பாக்கி குண்டு பாய்ந்தது
மற்றொன்று வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த அவரது பேரன் புகழேந்தியின் (11) தலையில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

தீவிர சிகிச்சை
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு தொடர்ந்து 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, தலையில் இருந்த தோட்டாவை அகற்றினார்கள். இதனை தொடர்ந்து சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுவனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.

பரிதாபமாக உயிரிழப்பு
இந்த நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. சிறுவனின் உயிரிழப்பால் அவனது பெற்றோர்கள், உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர்கள் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிஐஎஸ்எஃப் படையினரிடம் விசாரணை
இது தொடர்பாக சிஐஎஸ்எஃப் படையினரிடம் விசாரணையும் நடைபெற்றது. இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணையில் சிஐஎஸ்எஃப் துணை காமாண்டர் நோயல், ஆய்வாளர் சிதம்பரம் ஆகியோரிடம் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி விசாரணை நடத்தினார். பயிற்சியின்போது என்ன நடந்தது? அப்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் ரகம், குண்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications