திமுக அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறாராம்.. ஓப்பனாக பாராட்டிய டிடிவி தினகரன்! சொன்ன காரணம்!
தஞ்சாவூர்: அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கஞ்சனுார் கற்பகாம்பாள் உடனுரை அக்னீஸ்வரர் கோயிலில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், தனது மனைவி அனுராதாவுடன் தரிசனம் மேற்கொண்டார். இந்தக் கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிரன் சன்னிதியில் வழிபாடு நடத்தினார் டிடிவி தினகரன்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரனிடம் "குரு பெயர்ச்சி அரசியலில் யாருக்கு பலன் தரும்" என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "குரு பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் நன்மை என நான் ஜோசியம் சொல்ல முடியாது. தமிழகத்தில், நான் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் வெற்றி பெறுவோம். நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார்." என்றார்.
மேலும் பேசிய டிடிவி தினகரன், "அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி என்ற தீயவர் ஒருவர் இருக்கும்வரை அதிமுகவில் எந்த நல்லதும் நடப்பதாக எனக்கு தெரியவில்லை. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மையப்படுத்திய நல்லாட்சி அமையும்.
கர்நாடகாவில் ஆட்டம் போடும் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரிடம், ஜனநாயக முறைப்படி காவிரி நீர் தமிழகத்தின் ஜீவாதாரண பிரச்சனை, காவிரி நீர் தமிழக மக்களின் உரிமை. எனவே, காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது என்று சோனியா காந்தி ஒரு அறிவிப்பு செய்தாலே அனைத்தும் நடந்துவிடும்.
தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. இது மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீருக்காகவும், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர்." என விமர்சித்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தை விட தற்போது திமுக ஆட்சியில் அதிக அளவில் கோயில்களில் கும்பாபிஷேகம் நடப்பதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த தினகரன், "இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு நல்ல பக்திமான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவர். முன்பு அவர் அதிமுகவில் இருந்தவர். எனவே, அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications