‘அண்ணன் எடப்பாடி..’ திமுகவை தோற்கடிக்க கூட்டணி வைப்போம்.. தெளிவாக 'ரூட்' பிடித்த டிடிவி தினகரன்!
தஞ்சாவூர் : 1991ல் நடந்ததுபோல, மீண்டும் தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது எனது யூகம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் அமமுக இணையாது, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம், இணையவேண்டிய அவசியம் இல்லை, கூட்டணி வேண்டுமானால் வைப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கும் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கும் தஞ்சையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த டிடிவி தினகரன், நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி பேசி வருவது பற்றிப் பதிலளித்தார்.
வீட்டுக்கு போலீஸ் சென்றாலே எடப்பாடி பயப்படுவார்! சரியான தொடை நடுங்கி! டிடிவி தினகரன் கிண்டல்!
தஞ்சையில் தினகரன்
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய டிடிவி தினகரன், "நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அரசியலில் வாய்ப்பு இல்லை என்று எதையும் சொல்ல முடியாது. தற்போது என்.ஐ.ஏ ரெய்டுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்பும் என்.ஐ.ஏ ரெய்டுகள் நடத்தப்பட்டு ஆயுதங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
2024ல் சட்டமன்றத் தேர்தல்
இந்திய இறையாண்மைக்கு எதிரான சில செயல்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த தகவல்கள் உறுதியானால், 1991ல் தேர்தல் வந்தது போல, மீண்டும் தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது எனது யூகம்." என்றார்.
அண்ணன் எடப்பாடி புண்ணியத்தில்
மேலும் பேசிய தினகரன், கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மக்கள் திமுகவுக்கு ஆட்சிப் பொறுப்பை கொடுக்காமல் இருந்தனர். அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல் காரணமாகவே, இவருக்கு திமுகவே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து திமுகவுக்கு வாக்களித்து ஸ்டாலினை ஆட்சிப் பொறுப்புக்கு வரச் செய்தனர். ஏதோ ஓடும் வரை ஓடட்டும் என அவர் இருப்பதாகத் தெரிகிறது எனத் தெரிவித்தார்.
அதிமுகவோடு சேர முடிவு
அதிமுகவோடு எப்போது ஒன்று சேர்வீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த தினகரன், "நாங்கள் 5 வருடங்களாகத் தனியாகத் தான் இருக்கிறோம். தனி இயக்கமாக சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதிமுகவை பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு அடுத்த ரவுண்டு நடந்து கொண்டிருக்கிறது. அதன் தீர்ப்பின் மூலம் தான் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரச்சனை முடிவுக்கு வரும். நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டும் என்ற அவசியம் இல்லை, திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் கூட்டணி வைப்போம்" எனத் தெரிவித்தார்.
சொந்தக் கட்சிக்காரர்களையே
ஒரு சிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிர் காரணமாக அதிமுக தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக போராடி வருகிறார். அவரின் கருத்தும் எனது கருத்தும் ஒன்றுதான். சொந்த கட்சிக்காரர்களையே விலைக்கு வாங்கும் அளவில் அதிமுக தவறான பாதையில் பயணிக்கிறது என டி.டி.வி.தினகரன் பேசினார்.