100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. தமிழகத்தின் 7 ஐயப்ப சாமி பக்தர்கள் பலி..மலைப்பாதையில் கோர விபத்து
தேனி: கேரள மாநிலம் குமுளி மலைப்பாதையில் நேற்று இரவு 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த 7 ஐயப்ப சாமி பக்தர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். கேரளாவில் உள்ள ஐயப்ப சாமி கோவிலில் தரிசனம் முடித்து வீடு திரும்பியபோது அவர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தேனியில் இருந்து குமுளி மலைப்பாதை வழியாக கேரளா சென்று வர முடியும். தற்போது தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த வழியாக சென்று வருகின்றனர்.
100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்
இந்நிலையில் நேற்று சுமார் 11.30 மணியளவில் குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் உள்ள மாதா கோவில் அருகே ஐயப்ப சாமி பக்தர்களின் கார் வந்து கொண்டிருந்தது. இந்த கார் கேரளாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பாதையில் இருந்து 100 அடி பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
7 பேர் பலியான சோகம்
இதுபற்றி அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 7 ஐயப்ப சாமி பக்தர்கள் இறந்தது தெரியவந்தது. மேலும் கார் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடுவது தெரியவந்தது. இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
மேலும் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் ஆண்டிப்பட்டியை சேர்ந்த தேவதாஸ், நாகராஜ், சிவக்குமார், சண்முகசுந்தரபுரம் வினோத், சக்கம்பட்டி முனியாண்டி, மறவபட்டியை சேர்ந்த கன்னிசாமி உள்பட 7 பேர் இறந்தது தெரியவந்தது.
4 பேருக்கு சிகிச்சை
மேலும் இவர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்தனர். இதையடுத்து சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்தனர். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கி 7 பேர் இறந்ததும், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.