ஓபிஎஸ் வீடு அருகே ”அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ்” என போஸ்டர் -போலீசில் அதிமுகவினர் புகார்
தேனி: பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டு அருகே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார் என ஒட்டப்பட்ட போஸ்டர் தொடர்பாக அதிமுகவினர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின் முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக நடத்திய தர்ம யுத்தத்தை தொடர்ந்து, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டர் எடப்பாடி பழனிசாமி.
பல மாதங்களாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக 2 பிரிவுகளாக செயல்பட்ட நிலையில், டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை நிறுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
திராவிட மாடல்..புரியலையே? எம்ஜிஆர், ஜெயலலிதா மாடல்தான் பெஸ்ட் - போட்டு தாக்கும் சசிகலா
ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவே தொடர, அதிமுகவின் பொதுச்செயலாளராக யாரும் பொறுப்பேற்காமல் இருந்தனர். அதன் பின்னர் கட்சியின் புதிய உயர் பதவியாக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு அது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டன.
மோதல் தொடர்கதை
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிகாலம் நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார். இருப்பினும் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வருவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது.
சர்ச்சை போஸ்டர்
அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி மாவட்ட அதிமுகவினர், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தகவல்கள் கசிந்து வந்தன. ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜாவும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்தார். இந்த நிலையில், நேற்று அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார் என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ் மற்றும் மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் வீடு அருகே ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓ.பி.எஸ். படம் மிஸ்ஸிங்
பெரியகுளம் எம்.சுரேஷ் என்பவர் ஒட்டியுள்ள இந்த போஸ்டரில், "அம்மா நல்லாசியுடன் விரைவில் அஇஅதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன்." என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசில் புகார்
இந்த நிலையில் சுவரொட்டியை ஒட்டிய சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்து உள்ளனர். அதிமுகவில் இல்லாத ஒருவர் தலைமை குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சுவரொட்டி ஒட்டி இருப்பதாகவும், சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேனி மாவட்ட அதிமுக செயலாளர், நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக காவல் நிலையம் சென்று இந்த புகாரை அழைத்து உள்ளனர்.