அமமுகவுக்கு அதிமுக ஆதரவு... பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை கைப்பற்றிய ருசிகரம்
தேனி: தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை அதிமுக ஆதரவுடன் அமமுக கைப்பற்றியது.
தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் பிப்ரவரி 19ல் தேர்தல் நடந்தது. பிப்ரவரி 22ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக, உள்பட பிற எதிர்க்கட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் பிற கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் தோல்வியடைந்தனர்.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 7 வார்டு, அமமுக 6 வார்டு, அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்றது. திமுக சார்பில் 2வது வார்டில் பாண்டிசெல்வி, 3வது வார்டில் செல்வராஜ், 6வது வார்டில் மணிமாறன், 7 வது வார்டில் கணேஷ்பாபு, 12வது வார்டில் மகாராஜா, 14வது வார்டில் செந்தில்குமரன், 15ல் பவானி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அமமுக கவுன்சிலர்கள்
அமமுக சார்பில் 4வது வார்டில் பாண்டீஸ்வரன், 5வது வார்டில் சுந்தரவள்ளி, 8 வது வார்டில் சுகன்யா, 10ல் சந்திரா, 11ல் மிதுன் சக்கரவர்த்தி, 13ல் மலர்கொடி ஆகியோர் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் ஒன்றாவது வார்டில் தனலட்சுமி, 9 ல் லட்சுமிபிரியா ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.

தலைவர் பதவி போட்டி
இங்கு பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க 8 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. திமுக, அமமுக இடையே கடும் போட்டி நிலவியது. அதிமுக வெளிப்படையாக அமமுகவுக்கு ஆதரவு அளித்தது. அமமுக சார்பில் தலைவர் பதவிக்கு 11வது வார்டு கவுன்சிலர் மிதுன் சக்கரவர்த்தியும், திமுக சார்பில் 15வது வார்டு கவுன்சிலர் பவானியும் களம் இறங்கினர்.

அமமுக வெற்றி
இன்று பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் 8 ஓட்டுகள் பெற்று அமமுகவின் வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தி வெற்றி பெற்றார். தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் மிதுன் சக்கரவர்த்தி அமமுக சார்பில் 6 ஓட்டுகளையும், அதிமுக, திமுக சார்பில் தலா ஒரு ஓட்டுகளையும் பெற்றதாக கூறப்படுகிறது. அதாவது திமுக கவுன்சிலர் ஒருவர் மிதுன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2வது பேரூராட்சி
இதன்மூலம் தமிழகத்தில் ஒரத்தநாடு பேரூராட்சியை தொடர்ந்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சியும் அமமுக வசம் சென்றுள்ளது. பேரூராட்சியை பொறுத்தமட்டில் இந்த 2 மட்டுமே அமமுக வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications