தேனி பெரியகுளத்தில் பண மழை பொழிந்த ஏடிஎம்.. இளைஞர்களுக்கு நடந்த இன்ப அதிர்ச்சி.. இறுதியில் ட்விஸ்ட்
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வைகை அணை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பண மழை பொழிந்துள்ளது. ஏடிஎம் எந்திரத்தில் 500 ரூபாய் நோட்டுகள் தானாக வெளியேறியதை பார்த்த இளைஞர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அந்த பணத்தை எடுத்த இளைஞர்கள் , நேர்மையாக ஒப்படைத்தனர். தானாக வெளியேறிய பணத்தை நேர்மையாக ஒப்படைத்த இளைஞர்களை போலீசார் பாராட்டினார்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில், வைகை அணை சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த ஏடிஎம் எந்திரத்திற்கு பணம் எடுப்பதற்காக பெரியகுளம் பகுதியை சேர்ந்த 29 வயதாகும் சுந்தர் மற்றும், அவரது நண்பரான தங்கப்பாண்டி (30) ஆகியோர் வந்துள்ளார்கள்..

அப்போது சுந்தர் எந்திரத்தில் எஸ்பிஐ ஏ.டி.எம். மையத்தில் தனது ஏடிஎம் கார்டை சொருகி பணம் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் திடீரென ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் செலுத்தும் பகுதியில் இருந்து சரசரவென 500 ரூபாய் நோட்டுகள் வெளியே வந்து விழுந்தன. இவ்வாறு பண மழை பொழிந்ததை பார்த்ததும் சுந்தரும், தங்கப்பாண்டியும் இன்ப அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த பணத்தை எண்ணி பார்த்தனர். 500 ரூபாய் நோட்டுகள் 95 எண்ணம் இருந்தன. அதாவது ரூ.47 ஆயிரத்து 500 ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து தானாக வெளியேறியிருக்கிறது.
இதையடுத்து அந்த பணத்தை 2 பேரும் எடுத்த சுந்தரம் மற்றும் அவரது நண்பர் தங்கப்பாண்டி ஆகியோர், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்துக்கு பணத்துடன் சென்றனர். அங்கு தென்கரை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்தை சந்தித்து அந்த பணத்தை ஒப்படைத்தனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் நடந்த விஷயத்தை அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அந்த பணம் யாருடையது என்பதை தெரிந்து கொள்வதற்காக போலீசார் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று, ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள் அதில், அதே வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ராஜ்குமார், நேற்று முன்தினம் தனது மாமியார் மருத்துவ செலவுக்காக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் செலுத்தியிருக்கிறார்.
அப்போது அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் செலுத்தியதுடன், ஒப்புதல் பட்டனை சரியாக அழுத்தாமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணம் ஏ.டி.எம். எந்திரத்துக்குள் செல்லாமல் இருந்திருக்கிறது. பின்னர் சுந்தர் பணம் எடுக்க முயற்சி செய்தபோது, அந்த பணம் அப்படியே வெளியேறியது தெரியவந்திருக்கிறது.. இதையடுத்து ஏடிஎம் எந்திரத்தில் இருந்து தானாக வெளியேறிய பணம் ராஜ்குமாருக்கு உரியது தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் ராஜ்குமாரிடம் பணத்தை ஒப்படைத்தார்கள். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து தானாக வெளியேறிய பணத்தை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த சுந்தர் மற்றும் தங்கப்பாண்டிக்கு போலீஸ் டிஎஸ்பி நல்லு மற்றும் போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications