அதிமுக பொதுச் செயலாளர் ஓபிஎஸ்..! தேனியில் விண்ணை முட்டிய முழக்கம்!
தேனி: தேவர் குருபூஜையை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது "கழக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்" என தொண்டர்கள் கோஷமிட்டனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அப்போது மலர் கிரீடமும் அணிவித்தார். பின்னர் முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் சிலர் அதிமுக பொதுச் செயலாளர் ஓபிஎஸ் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் சலசலப்பு எழுந்தது.
வெடிக்கும் பிரச்சனை.. ஓபிஎஸ் இவ்வளவு அமைதி காப்பது ஏன்? எடப்பாடி தரப்பு அதிர்ச்சி
சசிகலா
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் மதுரையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவுக்கு அதிமுவில் இடமில்லை என கூறியிருந்தார்.
சர்ச்சை
அப்படியிருக்கும் போது ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிமுகவில் எந்த காலத்திலும் சேர்க்கக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்தே அணிகள் இணைப்புக்கு ஓபிஎஸ் ஒப்புக் கொண்டார்.
பொதுக் குழு கூட்டம்
அதன் பின்னர் பொதுக் குழு கூடி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் மறைந்த ஜெயலலிதாதான் என்பதால் அந்த பதவி தற்போது நீக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் உருவாக்கப்பட்டன. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேனியில் பேசிய ஓபிஎஸ், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என தெரிவித்திருந்தார்.
கருத்துக்கு முரண்
ஆனால் தற்போது அதுகுறித்து கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என தனது கருத்துக்கே முரணான கருத்தை அவர் தெரிவித்ததால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனக்கு கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் கட்சியை ஒற்றை தலைமையில் அதாவது தனது தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மல்லுக்கட்டியதாக கூறப்படுகிறது.
கட்சி நிர்வாகிகள் நியமனம்
வேட்பாளர் தேர்வு, கட்சி நிர்வாகிகள் நியமனம், எதிர்க்கட்சி தலைவர், கட்சி கொறடா உள்ளிட்ட பதவிகளில் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு போதிய முக்கியத்துவத்தை எடப்பாடி பழனிச்சாமி கொடுப்பதில்லை என்பதும் ஓபிஎஸ் தரப்பு வாதமாக உள்ளது.
அதிமுகவில்
இதனால் சசிகலாவை அதிமுகவில் கொண்டு வந்தால் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார் என ஓபிஎஸ் கணக்கு போட்டுத்தான் அவரை கட்சியில் இணைப்பது குறித்து பாசிட்டிவான கருத்தை ஓபிஎஸ் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. மீண்டும் பொதுச் செயலாளர் பதவி கொண்டு வரப்பட்டு அதில் சசிகலா அமரவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஓபிஎஸ்தான் பொதுச் செயலாளர் என அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.