ஆசிட் வீச்சு.. தீக்குளிப்பு.. அதகளமாகும் தேனி! பின்னணி என்ன?
தேனி: தேனி மாவட்ட திமுகவில் நிலவி வரும் உச்சக்கட்ட குழப்பத்தால் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்துக்கு கட்டுக்கட்டாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் மீது குவியும் புகார்களால் அவர் மீது கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் தேனி தெற்கு மாவட்டத்தில் நடந்த ஆசிட் வீச்சு, தீக்குளிப்பு நிகழ்வுகள் முதலமைச்சர் ஸ்டாலினை கோபம் கொள்ளச் செய்திருக்கின்றன.

திமுக உட்கட்சி
திமுக உட்கட்சித் தேர்தலால் தேனி மாவட்டத்தில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இது போன்ற தருணத்தில் பொதுவாக வாக்குவாதம், அடிதடி போன்ற சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கம். இதனை கட்சித் தலைமையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. இரு தரப்பையும் அழைத்துப் பேசி சுமூகமாக்கிவிடும். ஆனால் தேனி தெற்கு மாவட்டத்தில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகள் தான் திமுக தலைமையை கண் சிவக்க வைத்திருக்கிறது.

விரும்பத்தகாத நிகழ்வுகள்
தேனி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பண்ணைப்புரம் பேரூர் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு அளித்த ராஜேந்திரன் என்பவர் மீது ஆசிட் வீசப்பட்ட நிகழ்வும் ஷாஜகான் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நிகழ்வும் அண்ணா அறிவாலயத்திற்கே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இருவரில் யாரேனும் ஒருவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் அந்த பழிச் சொல் ஒட்டுமொத்த கட்சிக்கே வந்திருக்கும்.

தேனி தெற்கு
தேனி தெற்கு மாவட்ட திமுகச் செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன் மீது ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் தான் இருந்து வருகிறார். காரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அவர் பெரியளவில் ஃபெர்மாமன்ஸ் செய்யவில்லை என்பதேயாகும். இந்நிலையில் இப்போது உட்கட்சித் தேர்தல் ரூபத்தில் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராக புகார்கள் கட்டுக்கட்டாக குவிவதால் திமுக முப்பெரும் விழாவுக்கு பிறகு முதல்வர் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும் என்கிறார்கள் அறிவாயலய வட்டாரத்தினர்.

மீண்டும் சான்ஸ்
இதனிடையே ஒருங்கிணைந்த தேனி மாவட்ட பொறுப்பாளராக இருந்த ஜெயக்குமாருக்கு மீண்டும் ஒரு சான்ஸ் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவரது தரப்பு உற்சாகமாக வலம் வருகிறது. இதுமட்டுமல்லாமல் செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு நடைபெறவுள்ள மாவட்டச் செயலாளர் தேர்தலில் கம்பம் ராமகிருஷ்ணனுடன் ஜெயக்குமார் நேரடியாக போட்டி போடும் திட்டத்தில் இருக்கிறாராம்.

தேனி வடக்கு
தேனி தெற்கு மாவட்டத்தில் இப்படி பல்வேறு களேபரங்கள் நடைபெற்று வரும் நிலையில் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச் செல்வன் மீதும் புகார் ஓலைகள் அறிவாலயத்துக்கு பறந்த வண்ணம் உள்ளன. இவர் மீதான புகார்கள் பெரும்பாலனவை, அதிமுக, அமமுகவில் இருந்து தன்னுடன் வந்தவர்களுக்கு மட்டும் கட்சிப் பதவிகள் வழங்குகிறார் என்பதேயாகும்.












Click it and Unblock the Notifications