ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பிக்கு சிக்கல்.. சபாநாயகருக்கு வனத்துறை கடிதம்- விரைவில் வழக்குப்பதிவு?
தேனி : சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி எம்பி ரவீந்திரநாத்தை விசாரிக்க மக்களவை சபாநாயகருக்கு வனத்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.
ஓபிஎஸ் மகனும், தேனி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டத்தின் மின் வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்ததாக ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக ரவீந்திரநாத்தை விசாரிக்க மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு வனத்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.
விசாரனைக்கு பின் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யவும் வனத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் மகன் தோட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சொர்க்கம் வனப்பகுதிக்கு அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களை சுற்றி சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த சிறுத்தை
இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்ததாகவும், அதனை மீட்கும் முயற்சியில் பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டபோது, வன உதவிப் பாதுகாவலர் மகேந்திரன் என்பவரை தாக்கி விட்டு சிறுத்தை காட்டுக்குள் தப்பி ஓடியதாகவும் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

கிடை அமைத்தவர் கைது
இந்த நிலையில் வனத்திற்குள் 27ஆம் தேதி தப்பி ஓடியதாக கூறப்பட்ட சிறுத்தை கடந்த 28-ஆம் தேதி உயிரிழந்து விட்டதாகவும் அதனை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின், உடனடியாக எரிக்கப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேனேஜர்கள் கைது
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்களாக பணிபுரியும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ஓ.பி.ரவிந்திரநாத்தையும் கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சமீபத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திமுகவினர் புகார்
இந்நிலையில், தேனி எம்.பி ரவீந்திரநாத்தை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், திமுக போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் தேனி மாவட்ட வன அலுவலர் சமர்த்தாவிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.

வனத்துறை கடிதம்
சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் எம்.பி. ரவீந்திரநாத்தை விசாரிக்க மக்களவை சபாநாயகருக்கு வனத்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர். தேனி மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, தேனி எம்.பி ரவீந்திரநாத் மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகரிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யவும் வனத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications