சிலுசிலுவென பூங்காற்று.. திக்குமுக்காட வைத்த கொடைக்கானல் பயணம்.. இது செம்ம ரூட்!

Subscribe to Oneindia Tamil

தேனி: பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானலை பார்த்தால் அங்குள்ள வீடுகள், டவர்கள் ஓரளவு தெளிவாகவே தெரியும். இரவில் மேலே வெளிச்சங்கள் நம்மை நட்சத்திரங்கள் போலவே வரவேற்கும். சிறுவயதில் நான் எங்கள் ஊரில் இருந்து கொடைக்கானலை பார்க்கும் போது எட்டிவிடும் துரத்தில் இருக்கும் அந்த ஊருக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று தீராத ஆசை எனக்கு உண்டு.

ஆனால் நான் கல்லூரி செல்லும் வரையிலும் எனக்கு அந்த வாய்ப்பு அமையவே இல்லை. அதன்பின்னர் சென்னைக்கு ஊடகவியலாளானாக சென்ற பின் ஊருக்கு வரும் போது எல்லாம் பல முறை சென்று கண்டு ரசித்திருக்கிறேன். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை தான் போக முடியும்,

எனக்கு ஒரு தீராத ஆசை ஒன்று இருந்தது. கொடைக்கானலுக்கு செல்ல வேண்டும். ஆனால் காட்ரோடு வழியாக செல்லாமல் அடுக்கம் வழியாக செல்ல வேண்டும் என்று இருந்தது. அந்த ஆசைகள் லாக்டவுன் காலத்தில் தான் நிறைவேறியது. ஊரில் இருந்தே வேலை செய்யாமல் என்ற நிலை வந்ததால், அடிக்கடி 'அடுக்கம்' வழியாக கொடைக்கானல் செல்வேன்.

வாரகநதி

வாரகநதி

அப்படியொரு பயணம் அண்மையில் சென்றேன். அந்த பயணத்தை பற்றிதான் இப்போது சொல்ல விரும்புகிறேன். கொடைக்கானல் சுற்றுலாவை பற்றி சொல்லும் முன் பெரியகுளம் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் என்று பலருக்கும் தெரியும். பெரியகுளம் உண்மையிலேயே சொர்கத்தின் வாசல் படிதான். எனக்கு தெரிந்து மினரல் வாட்டரே தேவைப்படாத ஊர் பெரியகுளம். வராகநதி அவ்வளவு ருசியாக இருக்கும். அசுத்தம் ஆகாத குடிநீர். குடிக்க குடிக்க தேன் போல் இருக்கும். சோத்துப்பாறையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த அணையும் அதை சுற்றி உள்ள தண்ணீர் கால்வாய்களும் அற்புதமான இடங்கள். பெரியகுளத்தில் பிறக்காமல் போய்விட்டோமே என்று யோசிக்க வைக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலை

மேற்கு தொடர்ச்சி மலை

சரி இப்போது கொடைக்கானல் செல்லும் அடுக்கம் வழியை பற்றி பார்ப்போம். வைரமுத்து அண்மையில் ஒரு பாட்டு எழுதிஇருந்தார். அந்த பாடலில் உள்ள சில வரிகளை மட்டும் பாருங்கள்.. மேற்குத் தொடர்ச்சி மல இளைச்சுப் போகும் - அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும். மஞ்சளாறு அணையில் - நான் மலைக்காத்து வாங்காம மஞ்சளாத்து மூலையில மணிக்குருவி மேயாது, கும்பக்கரைச் சாலையில கோமிய வாசம் புடிக்காம மண்டக்குள்ள மல்லுக்கட்டி' மல்லியப்பூப் பூக்காது.. " வைரமுத்து எழுதிய பாடலில் வரும் கும்பரக்கரை அருவி சாலை தான் கொடைக்கானல் செல்லும் சாலை.

மனமே வராது

மனமே வராது

கும்பக்கரை அருவியை நோக்கி வாகனத்தை எடுத்து இயக்கி பாருங்கள். இயற்கை அன்னை உங்கள் உடலை புல்லரிக்க வைத்துவிடுவாள். இயற்கையே தொலைக்க விரும்பாத பசுமை.... இன்னமும் ஒரு ஊரில் இருக்கிறது என்றால்.. அது இங்கு தான்.. பெரியகுளத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூர பயணத்தில் கும்பக்கரை அருவி வந்துவிடும். எவ்வளவு நேரம் குளித்தாலும் எழுந்து வர மனமே இருக்காது. இதுவரை போகாதவர்கள் ஒரு முறை போய் பாருங்கள் வைரமுத்து ஏன் இப்படி பாட்டெழுதினார் என்பது உங்களுக்கே புரியும்.

உடல் மெய்சிலிர்க்கும்

உடல் மெய்சிலிர்க்கும்


கும்பக்கரை அருவியில் இருந்து அப்படியே அடுக்கம் மலை சாலையை பிடித்தால், உங்களை சுற்றிலும் மாமரங்கள் பூப்பூத்தபடி கண் சிமிட்டும். சீசன் நேரத்தில் போனால் மாம்பழங்கள் வாசனை உங்கள் மூக்கை துளைத்துவிடும். அப்படியே தாண்டி சென்றால் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் செக்போஸ்ட். இதை கடந்து சென்றால் மலைகளின் கொண்டை ஊசி வளைவுகள் உங்களை லயிக்க வைக்கும்.. ஒவ்வொரு வளைவின் ஓரத்திலும் தண்ணீர் சத்தம் இசை போல் கேட்கும். மெதுவாக மேலே சென்றால் உச்சியில் இருக்கும் அடுக்கம் கிராமம் உங்களை வரவேற்கும்.

எனக்கான உலகம்

எனக்கான உலகம்

நான் அடுக்கம் சாலையில் சென்ற போது 'சிலுசிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத' என்று தொடங்கும் வனமகன் படத்தின் பாடலை கேட்டபடியே மலையில் ஏறி இயற்கையை ரசித்தேன். பாடலும் இடங்களும் அப்படியே எனக்காகவே படைக்கப்பட்டது போல் உணர்ந்தேன் அடுக்கம் சாலை முழுவதும் மலை வாழையும், அவகெடோக்களும் குவிந்து கிடக்கும். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை இந்த இரணடுமே இருக்கும். அடுக்கம் தாண்டி பெருமாள் மலையை நோக்கி சென்றால் அப்படியே மீண்டும் வாகனம் மலை சரிவில் இறங்கும். அங்கு வரிசையாக பேருந்துகள் செல்லாத கிராமங்களை பார்க்கலாம். பெரியகுளத்தையும். தேனி மாவட்டத்தையும், வைகை அணையையும் அற்புதமாக ரசிக்கலாம். அத்தனையும் தெளிவாக தெரியும். அதைகடந்து மேலே செல்ல செல்ல குளிர் உங்கள் உடலை துளைத்து செல்லும். இறுதியாக பெருமாள் மலையில் கொடைக்கானல் சாலை சந்திப்பை அடைந்து மேலே செல்லலாம். அதன்பிறகு வழக்கம் போல் நீங்கள் விரும்பும் கொடைக்கானலின் ஒவ்வொரு இடத்தையும் ரசிக்கலாம்.

கார் பயணம்

கார் பயணம்

கொடைக்கானலுக்கு அடுக்கம் வழியாக செல்ல இருசக்கர வாகன பயணம் இனிமையாக இருக்கும். ஆனால் அதிகாலையிலோ அல்லது மாலை நேரங்களிலோ இருசக்கர வாகனத்தில் செல்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் காட்டு மாடுகளும் வன விலங்குகளும் அந்த நேரத்தில் தரையிறங்கும். காலை முதல் மாலை வரை காரில் செல்லலாம் . பெரியகுளம் வழியாக சென்று பாருங்கள்.. அற்புதத்தை உணருவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+