இடுக்கி தனி யூனியன் பிரதேசம்- முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு ஒற்றை தீர்வு-தேனி ஆட்சியரிடம் மனு!
தேனி: முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு இதுதான் நிரந்தர தீர்வு என தேனி மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட ஒரு மனு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு இப்படி ஒரு தீர்வா? தேனி ஆட்சியரை அதிரவைத்த கோரிக்கை மனு!
முல்லை பெரியாறு அணை
தமிழ்நாட்டுக்கு சொந்தமான கேரளா பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. ஆனால் 152 அடி உயரத்துக்கு நீரை தேக்க கூடாது என்பது கேரளாவின் நிலைப்பாடு. இது தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்றம் எத்தனை முறை உத்தரவிட்டாலும் அதை கேரளா மதிப்பதும் இல்லை. மாறாக முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று மட்டும் திரும்ப திரும்ப சொல்லி வருகிறது கேரளா.
தேனி ஆட்சியரிடம் மனு
இது ஒருபுறம் இருக்க தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அப்போது ஆட்சியர் பெற்ற மனு ஒன்றில் இடம்பெற்றிருந்த விவரம்தான் இப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் எம் கே எம் முத்துராமலிங்கம் தலைமையில் இந்த மனு கொடுக்கப்பட்டது.
கேரளாவின் நிலைப்பாடு
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களாக இருந்த தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான நீராதாரமான முல்லைப்பெரியாறு அணை பென்னிகுயிக் முயற்சி மற்றும் தென் மாவட்ட மக்களின் உயிர் தியாகத்தால் கட்டப்பட்டன. உருவாக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கூடாது என்கிறது கேரளா. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறு மாவட்ட விவசாய பொது மக்களின் நீர் உரிமையை பறித்து, கேரளா அரசு தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்க விடாமலும் அணையை பராமரிக்க விடாமலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறது
இடுக்கி யூனியன் பிரதேசம்
இடுக்கி என்பது தமிழ்நாட்டின் ஒரு பகுதி. ஆனால் நாடு விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, கேரளாவுடன் இணைக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. ஆகையால் பிரச்சனைக்குரிய இடுக்கி மாவட்டத்தை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்; இடுக்கி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டால் 50 ஆண்டுகால முல்லைப் பெரியாறு நதிநீர் பிரச்சனை நிரந்தர தீர்வு ஏற்படும். இதன் மூலம் முல்லைப் பெரியாறு நீர் ஆதாரத்தை நம்பியுள்ள ஆறு மாவட்ட விவசாய பெருமக்களின் நீண்ட நாள் கனவும் நிறைவேறும். பசுமை பாரதமாக, ஒற்றுமை மேம்பட நிரந்தர தீர்வு அமையும். ஆகையால் மத்திய, மாநில அரசுகள் இடுக்கி மாவட்டத்தை தனி இடுக்கி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.