கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையின் போது மின் இணைப்பை துண்டிக்க சொன்னது யார்.. ஓபிஎஸ் கேள்வி
தேனி: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தின் போது மின் இணைப்பை துண்டிக்க சொன்னது யார் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஒரு பங்களா உள்ளது. டீ எஸ்டேட்டுடன் கூடிய இந்த பங்களாவில் கோடை காலங்களில் அவர் சசிகலாவுடன் சென்று ஓய்வு எடுப்பார்.

பல நாட்கள் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் இந்த கொடநாட்டில் குட்டி தலைமைச் செயலகம் இயங்கியுள்ளது. இங்கு ஜெயலலிதா முக்கியமான கோப்புகளை வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இந்த எஸ்டேட்டிற்கு மர்ம கும்பல் கொள்ளை அடிக்க வந்துள்ளனர்.
அவர்களை தடுத்த காவலாளி ஓம் பகதூரை கொன்றுவிட்டு அந்த பங்களாவிலிருந்து எதையோ கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி சில கைது செய்யப்பட்ட போதிலும் கார் ஓட்டுநர் ஜனகராஜ் மரணம், சயானின் மனைவி குழந்தை விபத்தில் மரணம், கணினி ஆபரேட்டர் தற்கொலை உள்ளிட்ட நிறைய மர்மங்கள் அடங்கியுள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 3 மாதங்களில் குற்றவாளிகளை கைது செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதை கண்டித்து இன்றைய தினம் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஓபிஎஸ் அணியினரும் அமமுகவினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ்ஸும் தினகரனும் கலந்து கொண்டனர்.அப்போது ஓபிஎஸ் பேசுகையில் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை செய்த குற்றவாளிகளையும் அதன் பின்னால் இருப்பவர்களையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இல்லை என்றால் மக்கள் போராட்டமாக வெடிக்கும். திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக கொடநாடு குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வாங்கி கொடுப்போம் என தெரிவித்தார். ஆனால் 30 மாதங்கள் ஆன நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் ஆமை வேகத்தில் விசாரணை நடைபெறுகிறது.
கொடநாடு கொலை சம்பவம் நடந்த போது மின் இணைப்பை துண்டித்தது யார், துண்டிக்க சொல்லி உத்தரவு பிறப்பித்தது யார். உண்மையான குற்றவாளிகளை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும் என ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications